செய்திகள்
வெங்கையா நாயுடு

துணை ஜனாதிபதி அருணாச்சல பிரதேசம் பயணம்: சீனா எதிர்ப்பை கடுமையாக நிராகரித்தது இந்தியா

Published On 2021-10-13 22:53 GMT   |   Update On 2021-10-13 22:53 GMT
இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அருணாச்சல பிரதேசம் சென்றதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இந்தியா கடுமையாக நிராகரித்துள்ளது.
அருணாச்சல பிரதேசம் தங்களுடையது எனக்கூறி வரும் சீனா, இந்திய தலைவர்கள் அங்கு செல்வதற்கு ஆட்சேபனை செய்து வருகிறது.

இந்நிலையில் கடந்த வாரம் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அருணாச்சல பிரதேசம் சென்றார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீன வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது. எல்லைப் பிரச்சினைகளை சிக்கலாக்கும் நடவடிக்கைகளை இந்தியா நிறுத்த வேண்டும் என கூறியிருந்தது. சீனாவின் இந்த எதிர்ப்பை கடுமையாக நிராகரிப்பதாக இந்தியா பதில் அளித்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறுகையில் ‘‘சீனாவின் இதுபோன்ற கருத்துக்களை நாங்கள் நிராகரிக்கிறோம். அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி. இந்தியத் தலைவர்கள் வழக்கமாக வேறு இந்திய மாநிலங்களுக்கு செல்வதுபோல் அருணாச்சலப் பிரதேச மாநிலத்திற்கும் பயணம் செய்கிறார்கள்.



இந்திய தலைவர்கள் இந்த மாநிலத்திற்கு வருகை தருவதற்கு எதிர்ப்பது அர்த்தமற்றது. லடாக் எல்லையில் நிலவும் தற்போதைய சூழலுக்கு காரணம், இரு தரப்பு ஒப்பந்தத்தை மீறி சீனா தன்னிச்சையாக நிலையை மாற்றியமைத்ததுதான்’’ என்றார்.
Tags:    

Similar News