உள்ளூர் செய்திகள்
பல்லடம் அருகே கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
பிரசவிக்கமுடியாமல் அவதிப்பட்ட வெள்ளாடுக்கு கால்நடை உதவி மருத்துவர் அறிவுச்செல்வன் சிகிச்சை அளித்ததில் அந்த வெள்ளாடு 3 குட்டிகளை ஈன்றது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி நொச்சிபாளையம் கருப்பராயன் கோவில் வளாகத்தில் கால்நடை துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கால்நடைத்துறை மண்டல உதவி இயக்குனர் பரிமளராஜ் தலைமை வகித்தார்.பல்லடம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம்,கரைப்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கால்நடை உதவி மருத்துவர் அறிவுச்செல்வன் வரவேற்றார்.
முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி,கருவூட்டல்,சினை பரிசோதனை, தற்காலிக மலட்டுத்தன்மை நீக்கம், குடற்புழு நீக்கம், அறுவை சிகிச்சை,சுண்டு வாத அறுவை சிகிச்சை,கால்நடைகள் ஆண்மை நீக்கம் செய்தல் மற்றும் சிறந்த கிடாரி கன்றுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது.
இதில் பிரசவிக்கமுடியாமல் அவதிப்பட்ட வெள்ளாடுக்கு கால்நடை உதவி மருத்துவர் அறிவுச்செல்வன் சிகிச்சை அளித்ததில் அந்த வெள்ளாடு 3 குட்டிகளை ஈன்றது. மேலும் இந்த சிறப்பு முகாமில் சுமார் 300க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள் மெய்யப்பன்,தர்மராஜ், மற்றும் பாலசுப்பிரமணியன், கேபிள் சுப்பிரமணி, விவசாயிகள்,பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.