செய்திகள்
பாஜக

தி.மு.க.வை கண்டித்து பா.ஜனதா ஆர்ப்பாட்டம்- சென்னையில் 7 இடங்களில் நடந்தது

Published On 2020-09-22 07:45 GMT   |   Update On 2020-09-22 07:45 GMT
சென்னையில் தி.மு.க.வை கண்டித்து பாரதிய ஜனதா சார்பில் 7 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை:

சென்னை நங்கநல்லூர் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளை முன்னிட்டு பா.ஜனதா நிர்வாகிகள் சுவர் விளம்பரம் செய்து இருந்தார்கள்.

இந்த பிரச்சார விளம்பரங்களை தி.மு.க. நிர்வாகிகள் அழித்ததாக கூறப்படுகிறது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நங்கநல்லூர் பகுதி பா.ஜனதா நிர்வாகிகள் ஒன்று கூடினார்கள்.

அப்போது அங்கு வந்த தி.மு.க.வினருக்கும் பா.ஜனதா வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பா.ஜனதா மகளிர் அணியை சேர்ந்த மீனாட்சி, சரஸ்வதி ஆகியோர் காயம் அடைந்தனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து இன்று சென்னையில் 7 இடங்களில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் நங்கநல்லூரில் மாவட்ட தலைவர் சாய் சத்தியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், மீனவர் அணி செயலாளர் சதீஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் அம்பத்தூரில் சென்னை சிவா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஊடகப் பிரிவு தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத், பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தென் சென்னை மாவட்டம் சார்பில் மாவட்ட தலைவர் சைதை சந்துரு தலைமையில் பனகல் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. துணைத்தலைவர் எம்.என்.ராஜா, காளிதாஸ் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் விஜய் ஆனந்த் தலைமையில் கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயலாளர் டால்பின் ஸ்ரீதர், இளைஞர் அணி தலைவர் வினோஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மத்திய சென்னை மேற்கு மாவட்டத்தில் தனசேகர் தலைமையில் அண்ணாநகர் ஆர்ச் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பால்கனகராஜ், ஆதித்யா, முரளி யாதவ் ஆகியோர் பங்கேற்றனர்.

வடசென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் கிருஷ்ண குமார் தலைமையில் தண்டையார்பேட்டை மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது பா.ஜனதா கட்சியினர் கோ‌ஷம் எழுப்பியபடி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக வந்த வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதில் ஓ.பி.சி. அணியின் மாநில தலைவர் லோகநாதன், மாவட்ட நிர்வாகிகள் வன்னியராஜன், ஜெயகணேஷ், சதாசிவம், செல்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வடசென்னை மேற்கு மாவட்டம் சார்பில் தட்சிணாமூர்த்தி தலைமையில் பெரவள்ளூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சுமதி வெங்கடேஷ், ஆசிம் பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News