செய்திகள்
அச்சரப்பாக்கம் அருகே பஸ்-லாரி மோதல்: கிளீனர் பலி
அச்சரப்பாக்கம் அருகே விபத்தில் கிளீனர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அச்சரப்பாக்கம்:
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அருகே தொழுப்பேடு தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இங்கு தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை சாலையோரமாக நிறுத்தி பயணிகளை இறக்க முற்பட்டனர். அந்த நேரத்தில் பஸ்சின் பின்னால் சென்னையிலிருந்து பல்லடத்திற்கு கறிக்கோழி ஏற்றி வந்த மினி லாரி மோதியது. இதில் அரசு பஸ்சின் பின்பக்கம் சேதமடைந்தது. மினி லாரியின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் லாரியின் கிளீனர் செந்தில்குமார் (வயது 43) சம்பவ இடத்திலேயே பலியானார். டிரைவர் லேசான காயங்களுடன் தப்பினார். லாரியில் வந்த சுமை தூக்கும் தொழிலாளி அசோக்குமார் படுகாயமடைந்து செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அச்சரப்பாக்கம் போலீசார் விரைந்து சென்று செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக அச்சரப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.