இந்தியா
ஐந்து மாநில தேர்தல் அறிவிப்பால் அரசியல் கட்சிகள் உற்சாகம் - தலைவர்கள் கருத்து
உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு மக்கள் விடைகொடுக்க உள்ளதாக சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பிப்ரவரி 10ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல்கள் நடத்தப்படும் என, தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா அறிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் மாநிலங்களில் பிப்ரவரி 14ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. மணிப்பூரில் பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. மார்ச் 10ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.
தேர்தல் அறிவிப்பை அனைத்து அரசியல் கட்சிகளும் வரவேற்றுள்ளன. அதேசமயம், இந்த தேர்தலில் தங்கள் கட்சிக்கான வெற்றி வாய்ப்பு, கள நிலவரங்கள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து தலைவர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்த வண்ணம் உள்ளனர்.
தேர்தல் அறிவிப்பை வரவேற்றுள்ள பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, ‘வரும் சட்டமன்ற தேர்தல்களில் பாஜக மீணடும் மக்களின் ஆசியையும் ஆதரவையும் பெறும். தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும்’ என நம்பிக்கை தெரிவித்தார்.
#WATCH | BJP will be successful in forming in the government again with overwhelming majority when results for Uttar Pradesh Assembly elections are announced on March 10. There should be no doubt about it: Chief Minister Yogi Adityanath pic.twitter.com/1A0NpUXJOm
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) January 8, 2022
உத்தர பிரதேசத்தில் மார்ச் 10ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்போது, தனி மெஜாரிட்டியுடன் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறி உள்ளார்.
உத்தரகாண்ட் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை வரவேற்றுள்ள காங்கிரஸ் தலைவர் ஹரிஷ் ராவத், ‘தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் தேர்தல் ஆணையம் வகுத்துள்ள வழிகாட்டுதல்களை காங்கிரஸ் கட்சி எப்போதும் கடைப்பிடிக்கிறது’ என்றார்.
உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு மக்கள் விடைகொடுக்க உள்ளதாக சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். விதிமுறைகளை சமாஜ்வாடி கட்சி பின்பற்றும் என்று கூறிய அவர், விதிமுறைகளை ஆளுங்கட்சி பின்பற்றுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
‘பிரதமர் மோடி ஏற்கனவே பல்வேறு அரசியல் கூட்டங்களை நடத்தியிருக்கிறார். உ.பி.யில் கடந்த ஒரு மாதமாக சுற்றுப்பயணம் செய்து வரும் அவர், முதல்வர் யோகி ஆதித்யநாத்தை 10-15 முறைக்கு மேல் சந்தித்துள்ளார். எனவே, ஆளுங்கட்சிக்கு ஒன்றும் இல்லை. பொருளாதார ரீதியாக நலிவடைந்த கட்சிகள் தான் பிரச்சனைகளை சந்திக்கும்’ என மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறி உள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களை காங்கிரஸ் கட்சி வரவேற்பதாக பஞ்சாப் மாநில மந்திரி வெர்கா கூறி உள்ளார். மேலும், ‘கொரோனா பரவி வருவதால் தேர்தல் ஆணையம் கடுமையான நெறிமுறைகளை விதிக்க வேண்டும். பஞ்சாப் மாநிலத்தில் வாக்கு சதவீதம் அதிக அளவில் இருக்கும் என உறுதியாக நம்புகிறேன். சமூக ஊடகங்கள், டிவி மற்றும் பிற ஊடக வடிவங்கள் மூலம் எங்கள் தேர்தல் அறிக்கையை மக்களுக்கு கொண்டு செல்வோம்’ என்றும் மந்திரி வெர்கா தெரிவித்தார்.