செய்திகள்
ஸ்புட்னிக்-வி தடுப்பூசி

ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இந்த மாத இறுதியில் கிடைக்கும்

Published On 2021-04-13 07:56 GMT   |   Update On 2021-04-13 07:56 GMT
ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து வினியோகிக்கும் பொறுப்பை ஐதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டி நிறுவனம் பெற்று உள்ளது.

சென்னை:

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதில் கோவிஷீல்டு தடுப்பூசியை இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ராஜெனகா நிறுவனமும் இணைந்து தயாரித்து உள்ளன. இந்த தடுப்பூசியை இந்தியாவில் மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள சீரம் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது.

அதுபோல கோவேக்சின் தடுப்பூசியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனமும் இணைந்து கண்டுபிடித்தன. பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் தடுப்பூசியை தயாரித்து மத்திய அரசுக்கு வழங்கி வருகிறது.

இதுவரை சுமார் 11 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது 2-வது கட்ட தடுப்பூசி போடும் பணி நாடுமுழுவதும் நடந்து வருகிறது. இதுதவிர முதல் கட்ட தடுப்பூசியை இன்னமும் ஏராளமானோர் போடாமலேயே உள்ளனர்.

இந்தநிலையில் தடுப்பூசிக்கான தேவை அதிகரித்து இருப்பதால் சில மாநிலங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவசர கால பயன்பாட்டுக்கு ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதுதொடர்பாக மருத்துவ நிபுணர் குழுவினர் நேற்று டெல்லியில் கூடி ஆலோசித்து ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு அனுமதி கொடுத்தனர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியது. இதன் மூலம் இந்தியாவில் பயன்படுத்தப்பட இருக்கும் 3-வது தடுப்பூசி என்ற நிலையை ஸ்புட்னிக்-வி தடுப்பூசி பெற்றுள்ளது. தற்போது இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தயாரிக்கப்படவில்லை.

ரஷியாவில் மட்டுமே இந்த தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது. உலகம் முழுக்க 59 நாடுகள் இந்த தடுப்பூசியை பயன்படுத்தி வருகின்றன. கொரோனாவை தடுப்பதில் 91.6 சதவீதம் அளவுக்கு இந்த தடுப்பூசி வெற்றி பெற்று இருக்கிறது. மேலும் 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் இந்த தடுப்பூசியை வைத்திருந்து பயன்படுத்த முடியும்.


ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து வினியோகிக்கும் பொறுப்பை ஐதராபாத்தில் உள்ள டாக்டர் ரெட்டி நிறுவனம் பெற்று உள்ளது. இந்த நிறுவனம் ரஷியாவில் இருந்து முதல் கட்டமாக ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இறக்குமதி செய்து தருவதாக கூறி உள்ளது. 2 முதல் 3 வாரங்களுக்குள் ரஷியாவில் இருந்து ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இறக்குமதி செய்யப்படும் என்று தெரியவந்துள்ளது.

எனவே இந்த மாத இறுதியில் அல்லது மே மாத தொடக்கத்தில் இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்பிறகு ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. 90 நாட்கள் அதாவது 3 மாதங்கள் இதற்கு தேவைப்படும். எனவே இந்தியாவில் தயாரிக்கும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி ஆகஸ்டு மாதவாக்கில்தான் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிகிறது. அதுவரை ரஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும்.

கோவிஷீல்டு, கோவேக்சின் இரு தடுப்பூசிகளும் தற்போது மிக குறைந்த விலைக்கு விற்பனையாகிறது. ஆனால் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி ரூ.750-க்கு விற்பனையாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் இது தயாராகும் போது விலை குறைய வாய்ப்பு உள்ளது.

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை டாக்டர் ரெட்டி நிறுவனம் தவிர மேலும் 4 நிறுவனங்கள் தயாரிக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதன்மூலம் மாதத்துக்கு 8 கோடி டோஸ் தயார் செய்ய முடியும். இதில் 4 கோடி டோஸ் இந்தியாவுக்கும், 4 கோடி டோஸ் ஏற்றுமதிக்கும் பயன்படுத்தப்படும்.

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை எடுத்துச் செல்வதும், பயன்படுத்துவதும் மிக எளிதாகும். எனவே இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த பிறகு நிறைய பேர் பலன் அடைய வாய்ப்பு உள்ளது.

இதற்கிடையே பயோ-இ, நோவேக்ஸ், ஜைடஸ் கேடிலா, இன்ட்ராநேசல் ஆகிய 4 தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு விரைவில் அனுமதி கொடுக்கும் என்று தெரிகிறது. இந்த தடுப்பூசிகளும் நடைமுறைக்கு வந்து விட்டால் எந்த மாநிலத்திலும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இருக்காது. மேலும் தடுப்பூசி விலையும் கணிசமான அளவுக்கு குறையும்.

Tags:    

Similar News