செய்திகள்
பராக் அகர்வால்

டுவிட்டரின் புதிய சிஇஓ-வாக இந்திய வம்சாவளி நிர்வாகி பராக் அகர்வால் நியமனம்

Published On 2021-11-29 17:19 GMT   |   Update On 2021-11-29 17:19 GMT
டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை பதவி தனக்கு கிடைத்த கவுரவம் என பராக் அகர்வால் கூறி உள்ளார்.
நியூயார்க்:

கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) ஜேக் டோர்சி இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், விரிவான கடிதத்தையும் பதிவு செய்துள்ளார். 

‘கிட்டத்தட்ட 16 வருடங்கள் நிறுவனத்தின் இணை நிறுவனர் முதல் சிஇஓ வரை பல பொறுப்புகளை ஏற்றுள்ளேன். தறபோது வெளியேறுவதற்கான நேரம் இது. ஒரு நிறுவனம் நிறுவனர் தலைமையில் இருப்பதன் முக்கியத்துவம் பற்றி நிறைய பேசப்படுகிறது’என டோர்சி கூறியிருந்தார்.

ஜேக் டோர்சி பதவி விலகியதை அடுத்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில்நுட்ப நிர்வாகி பராக் அகர்வால் டுவிட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தனது நியமனம் குறித்து அகர்வால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், டுவிட்டர்  தலைமை பதவி தனக்கு கிடைத்த கவுரவம் என்று கூறி உள்ளார். மேலும் டோர்சியின் தொடர்ச்சியான வழிகாட்டுதல் மற்றும் அவரது நட்புக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

ஐஐடி பாம்பே மற்றும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்த அகர்வால், 10 ஆண்டுகளுக்கு முன்பு டுவிட்டரில் சேர்ந்தார். 
Tags:    

Similar News