செய்திகள்
பிடிபட்ட பாகிஸ்தான் படகு

குஜராத் கடற்கரையில் மிதந்த ரூ.5 கோடி போதைப்பொருள் பறிமுதல்

Published On 2019-10-07 11:04 GMT   |   Update On 2019-10-07 11:04 GMT
குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள கடல் பகுதியில் மிதந்த ரூ.5 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை எல்லை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.
அகமதாபாத்:

குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியில் அனாதையாக நின்ற 2 பாகிஸ்தான் நாட்டு படகுகளை எல்லை பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் பறிமுதல் செய்தனர்.

இதைதொடர்ந்து, அந்த மாவட்டத்துக்குட்பட்ட கடலோர பகுதிகளில் தீவிரமான ரோந்துப் பணியில் எல்லை பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில், கட்ச் மாவட்டத்தில் உள்ள அராபிய கடல் பகுதியில் மிதந்துக் கொண்டிருந்த ஒரு கிலோ எடையுள்ள போதைப்பொருள் பாக்கெட்டை எல்லை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். இதன்
சர்வதேச மதிப்பு சுமார் 5 கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, கடந்த மே மாதம் 21-ம் தேதி குஜராத் கடல் பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் தென்பட்ட பாகிஸ்தான் படகை கடலோர காவல் படையினர் விரட்டிச் சென்று சுற்றி வளைத்தனர்.

அவர்களை கண்டதும் பாகிஸ்தான் படகில் இருந்தவர்கள் சில பொருட்களை அள்ளி கடலுக்குள் போட்டனர். இந்தியாவுக்கு அவர்கள் போதைப்பொருட்களை கடத்த முயன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில் அந்த படகில் இருந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

அன்று கடலில் அவர்கள் தூக்கி எறிந்த போதைப்பொருள் பாக்கெட்டில் ஒன்று நேற்று கரை ஒதுங்கி இருக்கலாம் என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News