செய்திகள்
பிரதமர் மோடிக்கு அஞ்சல் தலை - வைரல் பதிவுகளின் உண்மை பின்னணி
பிரதமர் நரேந்திர மோடிக்கு துருக்கி அரசாங்கம் அஞ்சல் தலை வெளியிட்டுள்ளதாக கூறி வைரலாகும் தகவல் குறித்து தொடர்ந்து பார்ப்போம்.
பிரதமர் நரேந்திர மோடி தனது 71-வது பிறந்தநாளை செப்டம்பர் 17 ஆம் தேதி கொண்டாடினார். சமூக வலைதளங்களில் பிரதமர் மோடிக்கு பலத்தரப்பட்டோர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதற்கிடையே சிலர் பிரதமர் மோடி புகைப்படம் அடங்கிய அஞ்சல் தலை புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் இந்த அஞ்சல் தலை துருக்கி அரசாங்கம் பிரதமர் மோடியை பாராட்டி பரிசளித்ததாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அஞ்சல் தலை மற்றும் பிரதமர் மோடியின் புகைப்படங்கள் வைரல் பதிவுகளில் இணைக்கப்பட்டுள்ளன.
வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், துருக்கி அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு இந்த அஞ்சல் தலையை வெளியிட்டது என தெரியவந்துள்ளது. மேலும் அந்த ஆண்டு நடைபெற்ற ஜி20 மாநாட்டில் கலந்து கொண்ட அனைத்து தலைவர்களுக்கும் இதேபோன்ற அஞ்சல் தலையை அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டது.
அந்த வகையில் வைரல் பதிவுகளில் உள்ள அஞ்சல் தலை பிரதமர் மோடிக்காக பிரத்யேகமாக வெளியிடப்படவில்லை என உறுதியாகிவிட்டது. மேலும் இது சமீபத்தில் வெளியிடப்பட்ட அஞ்சல் தலை இல்லை என்பதும் தெளிவாகிவிட்டது.