உள்ளூர் செய்திகள்
ஆம்னி பஸ் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்ட டிரைவர் குடும்பத்தினர்

ஆம்னி பஸ் முன்பு அமர்ந்து குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட டிரைவர்கள்

Published On 2022-05-06 10:32 GMT   |   Update On 2022-05-06 10:32 GMT
ராமநாதபுரத்தில் 6 மாதம் சம்பளம் வழங்காததால் ஆம்னி பஸ் முன்பு அமர்ந்து குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட டிரைவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் அண்ணா நகரை சேர்ந்தவர் துரைக்கண்ணன். இவர் சென்னையில் உள்ள தனியார் பஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

இவருக்கு கடந்த 6 மாதங்களாக சம்பளப் பாக்கியான ரூ. 80 ஆயிரத்தை வழங்காததால் வேலையில் இருந்து விலகி விட்டார். சம்பளத்தை கேட்டபோது, சென்னைக்கு வரச்சொல்லி 3முறை அலைக்கழித்து, காசோலை வழங்கியுள்ளனர்,

காசோலையை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லை என்று சொல்லிவிட்டதால் ஏமாற்றம் அடைந்தார். தங்களுடைய குடும்பம் வாழ்வாதாரத்தை இழந்து, பிள்ளைகளை படிக்க வைக்க முடியாமல் மனவேதனையுடன் இருந்துள்ளார்.

இதேபோல ராமநாதபுரம் பெருவயல் வெண்குளத்தைச் சேர்ந்த டிரைவர் முனியசாமி என்பவருக்கும் 6 மாத சம்பள பாக்கியான ரூ. ஒன்றரை லட்சத்தை வழங்கவில்லை. இதையடுத்து துரைக்கண்ணன், அவரது மனைவி, 2 பிள்ளைகள் மற்றும் முனியசாமி ஆகியோர் ராமநாதபுரத்தில் இருந்து சென்னை செல்ல இருந்த தனியார் பஸ்சை மறித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை செல்ல இருந்த பஸ் புறப்படாததால் பயணிகள் செய்வதறியாது தவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் வருகிற 10ந் தேதி வங்கிக்க ணக்கில் பணத்தை அனுப்பி விடுவதாக தெரிவித்தார். அதையடுத்து தர்ணாவில் ஈடுபட்டவர்கள் சமாதானமாகி கலைந்து சென்றனர். 

Tags:    

Similar News