செய்திகள்
பேராவூரணி அருகே தீ விபத்தில் வீடு எரிந்து நாசம்
பேராவூரணி அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் எரிந்து நாசமானது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஆதனூர் கிராமத்தில் வசித்து வருபவர் ராஜரத்தினம் (வயது 76). இவரது மனைவி ரூபினம்மாள் (72). இவர்கள் இருவரும் வசித்து வந்த வீடு திடீரென இரவு தீப்பற்றி மளமளவென எரிந்தது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அருகில் ஓடிய வாய்க்கால் நீரை எடுத்து வந்து தீயை அணைத்து பக்கத்து வீடுகளுக்கு பரவாமல் தடுத்தனர்.
மின்கசிவால் ஏற்பட்ட தீயினால் அடை வைக்கப்பட்ட கோழி, குஞ்சுகள், வீட்டு உபயோக பொருட்கள் போன்றவை தீயில் எரிந்து சாம்பலானது. தீயினால் சேதமடைந்த பொருட்களின் மதிப்பு ரூ.30 ஆயிரம் இருக்கலாம் என கூறப்படுகிறது. தகவல் அறிந்த கிராம உதவியாளர் கண்ணன் சம்பவ இடத்தை பார்வையிட்டு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.