செய்திகள்
ரவி

தீபாவளி சீட்டு நடத்தி ரூ. 70 லட்சம் மோசடி- ஆந்திராவை சேர்ந்தவர் தப்பி ஓட்டம்

Published On 2019-10-25 12:22 GMT   |   Update On 2019-10-25 12:22 GMT
செங்குன்றத்தில் ½ பவுன் நகை தருவதாக கூறி தீபாவளி சீட்டு நடத்தி ரூ.70 லட்சம் மோசடி செய்த நபர் குடும்பத்துடன் ஆந்திராவுக்கு தப்பி சென்று விட்டார்.

செங்குன்றம்:

செங்குன்றம், சர்ச் தெருவில் வசித்து வந்தவர் ரவி என்ற மங்கலம். ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த இவர் கடந்த 3 ஆண்டுகளாக இங்கு குடும்பத்துடன் வசித்து வந்தார்.

அவர் தீபாவளிக்கு ½ பவுன் தங்க காசு, பட்டாசு, மளிகை பொருட்கள் கொடுப்பதாக கவர்ச்சி திட்டங்கள் அறிவித்து தீபாவளி சீட்டு மற்றும் ஏலச்சீட்டு நடத்தினார். இதில் செங்குன்றம், நாரவாரி குப்பம், சோத்துப்பாக்கம், அருமந்தை, கும்மனூர், பாடியநல்லூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்டோர் சேர்ந்து பணம் கட்டி வந்தனர்.

அவர்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) தங்க காசு, மளிகை பொருட்கள், பட்டாசு கொடுப்பதாக ரவி தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை ரவி திடீரென குடும்பத்துடன் மாயமானார். அவரது வீடு பூட்டப்பட்டு கிடந்தது. இதனை அறிந்து சீட்டு கட்டி ஏமாந்தவர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்கள் செங்குன்றம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் தெரிவித்தனர்.

ஏலச்சீட்டு மோசடியில் ஈடுபட்ட ரவி குடும்பத்துடன் ஆந்திராவுக்கு தப்பி ஓட்டம் பிடித்து இருப்பது தெரிந்தது. அவர் ரூ.70 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது.

இதுகுறித்து செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News