செய்திகள்
தனியார் ஜவுளி கடையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்த காட்சி.

ஜெயங்கொண்டம் பகுதியில் வணிக நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை

Published On 2021-04-11 12:44 GMT   |   Update On 2021-04-11 12:44 GMT
ஜெயங்கொண்டம் பகுதியில் வணிக நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் மற்றும் அங்கு வந்து சென்ற பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
ஜெயங்கொண்டம்:

கொரோனா வைரஸ் தொற்று 2️-வது அலையாக தற்போது அதிகரித்து வருகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தடுப்பு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள வணிக நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் தொழிலாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து சுகாதாரத்துறை சார்பில் நடமாடும் கொரோனா தடுப்பு பரிசோதனை குழுவினர் சம்பந்தப்பட்ட வணிக நிறுவனத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது வணிக நிறுவன உரிமையாளர்கள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் மற்ற வணிக நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் உள்ளிட்டோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சளி மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

இதேபோல் வணிக நிறுவனங்களுக்கு வந்து சென்ற பொதுமக்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து பல்வேறு இடங்களில் பரிசோதனை நடத்தப்படும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் ஜெயங்கொண்டம் நடமாடும் மருத்துவ குழு வட்டார மருத்துவ அலுவலர் மேகநாதன் தலைமையில் டாக்டர் உமா, சுகாதார ஆய்வாளர் பிரவின்குமார், செவிலியர் மேகலா ஆகியோர் கொண்ட குழுவினரால் சீனிவாசன் நகர், மலங்கண்குடியிருப்பு, மேலக்குடியிருப்பு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அப்போது பொதுமக்கள் விழிப்புடனும், முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து, கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுவது உள்ளிட்டவற்றை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
Tags:    

Similar News