உள்ளூர் செய்திகள்
பங்களா கோர்ட்டு கட்டிடம் திறப்பு

கோமங்கலம்புதூரில் 500 ஆண்டுகள் பழமையானது-புதுப்பிக்கப்பட்ட பங்களா கோர்ட்டு கட்டிடம் திறப்பு

Published On 2022-05-06 09:57 GMT   |   Update On 2022-05-06 09:57 GMT
கிராமத்தின் அடையாளமாகவும், நுழைவு வாயிலாகவும் பங்களா கோர்ட்டு உள்ளது. இது 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
பொள்ளாச்சி,  

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருேக உள்ளது கோமங்கலம் புதூர் கிராமம். இந்த கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 
 
இந்த கிராமத்தின் அடையாளமாகவும், நுழைவு வாயிலாகவும் பங்களா கோர்ட்டு உள்ளது. இது 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. 

இந்த கிராமத்தில் என்ன பிரச்சினை ஏற்பட்டாலும் இந்த பங்களா கோர்ட்டில் வைத்து ஊர் தலைவர் முன்னிலையில் தீர்ப்பு வழங்கப்படும். இதன் காரணமாக இதனை பங்களா கோர்ட்டு என அழைத்து வருகின்றனர்.

தற்போதைய காலத்தில் ஏராளமான வழித்தடங்கள் இருந்தாலும், முந்தைய காலத்தில் இந்த பங்களா கோர்ட்டு தான் கோமங்கலம்புதூரின் நுழைவு வாயிலாக விளங்கியுள்ளது.
 
ஓடுகள் வேயப்பட்ட கட்டிடத்தில் இருபக்கமும் 4 அடி உயரத்தில் சுமார் 100 சதுர அடி பரப்பளவு கொண்ட  மேடையில் அமர்ந்து தான் முன்பு பல வழக்குகளுக்கு ஊர் பெரியவர்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். குடிசைகள் நிறைந்த பகுதியில், இந்த கட்டிடம் மட்டுமே பெரியதாக இருந்ததால் பங்களா கோர்ட்டு என அழைத்துள்னர்.

மேலும் புரட்டாசி, மார்கழி மாதங்கள் மற்றும் கிருஷ்ண ஜெயந்தியின் போது, வீதி உலா வரும் பெருமாளின் உற்சவத்தை இந்த மேடையில் வைத்து பஜனை பாடல்கள் பாடி பொதுமக்கள் வழிபாடு செய்வது காலம், காலமாக நடந்து வருகிறது.

ரஜினியின் வள்ளி திரைப்படம் உள்பட பல்வேறு படங்களிலும் இந்த பங்களா கோர்ட்டு இடம் பெற்றுள்ளது.
 
இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்ட பங்களா கோர்ட்டு மீது லாரி மோதியதால் 2 பக்கம் இருந்த தூண்கள் சேதம் அடைந்தன. ஊரின் அடையாளமாக திகழ்ந்த பங்களா கோர்ட்டை புதுப்பிக்க முடிவு செய்து, அதற்கான பணிகளை மேற்கொண்டனர். 

ஊர் பொதுமக்கள், சிறுவர்கள், சிறுமிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து பணியில் ஈடுபட்டனர். சேதம் அடைந்த தூண்கள் அகற்றப்பட்டு நாகர்கோவில் பகுதியில் இந்து புதிய தூண்கள் கொண்டு வரப்பட்டு பொருத்தப்பட்டன.

மேடையின் இருபுறமும் உள்ள சுவர்களில் ஸ்ரீவில்லி புத்தூர் கோவிலின் ராஜகோபுரம் மற்றும் சிதம்பரம் கோவிலின் ராஜகோபுரம் ஒவியங்கள் வரையப்பட்டுள்ளன.

சீரமைப்பு பணிகள் அனைத்தும் முடிந்து நேற்று பங்களா கோர்ட்டு திறந்து வைக்கப்பட்டது. கிராமத்தின் பாரம்பரியத்தையும், அடையாளத்தையும் பறைசாற்றும் வகையில் உள்ள இந்த பங்களா கோர்ட்டின் சிறப்பை இளம் தலைமுறையினரும் அறந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதனை சிறுவர், சிறுமிகளை கொண்டு ஊர் பொதுமக்கள் திறந்து வைத்தனர். இதனை திருவிழா போல செண்டை மேளங்கள் முழங்க பங்களா கோர்ட்டு திறந்து வைக்கப்பட்து.

Tags:    

Similar News