செய்திகள்
உடுமலை அருகே சொந்த வீட்டிலேயே நகையை திருடி நாடகமாடிய பெண் கைது
நகை திருட்டு புகாரை தொடர்ந்து கந்தராசு வீட்டில் ஆய்வு செய்யப்பட்டதில் கதவு உடைப்பு, பீரோ உடைப்பு போன்ற சம்பவங்கள் தெரியவில்லை.
உடுமலை:
உடுமலை அருகே உள்ள தேவனூர்புதூர் எம்.ஜி.ஆர்., காலனியை சேர்ந்தவர் கந்தராசு (வயது 33), தேங்காய் வியாபாரி. இவரது மனைவி லோகேஸ்வரி (32).
இந்தநிலையில் கந்தராசு வீட்டு பீரோவில் இருந்த 11பவுன் திருட்டு போனது. இதுகுறித்து அவர் தளி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் கந்தராசு மனைவி லோகேஸ்வரியே அவரது தம்பி, அரவிந்த்குமார்(26) மூலம் திருடியது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து ரூ.1.15 லட்சம் மதிப்புள்ள நகையை மீட்டனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில்:
நகை திருட்டு புகாரை தொடர்ந்து கந்தராசு வீட்டில் ஆய்வு செய்யப்பட்டதில் கதவு உடைப்பு, பீரோ உடைப்பு போன்ற சம்பவங்கள் தெரியவில்லை. இதையடுத்து குடும்ப நபர்களே இச்சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
சம்பவம் நடந்த சமயத்தில் பேசப்பட்ட செல்போன் கால்கள் அடிப்படையில் விசாரணை செய்ததில் குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், லோகேஸ்வரி தனது தம்பியை வைத்து திருடியதை ஒப்புக்கொண்டார். கடந்த 11-ந்தேதி சினிமாவுக்கு சென்ற லோகேஸ்வரி, தனது தம்பியை அழைத்து வீட்டில் யாரும் இல்லை.
நகைகளை எடுத்து அவரது வீட்டில் வைத்திருக்குமாறு தெரிவித்துள்ளார். பின்னர் கணவரிடம் நகை திருடப்பட்டதாக கூறி நாடகமாடியுள்ளார். விசாரணையில் 2 பேரும் சிக்கிக்கொண்டனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.