லைஃப்ஸ்டைல்
மூங்கில் அரிசி

மூங்கில் அரிசி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

Published On 2021-03-22 06:21 GMT   |   Update On 2021-03-22 06:21 GMT
இனிப்பு சுவை கொண்ட மூங்கில் அரிசி உறுதியானது மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்தது. இந்த அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டால் கழுத்து வலி, இடுப்பு வலி போன்றவை சரியாகும்.
மூங்கில் அரிசி என்பது காடுகளில் வளர்கின்ற மூங்கிலின் பூ பகுதியில் இருந்து சேகரிக்கப்படும் அரிசியாகும். மூங்கில் அரிசி ஆனது அதிகமான ஊட்டச்சத்துகள் மற்றும் மருத்துவ குணங்களை கொண்டது. மூங்கிலில் இருந்து சேகரிக்கப்படும் அரிசி மிக குறைந்த அளவிலேயே கிடைக்கும். மூங்கில் மரம் 40 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும். இந்த மூங்கில் பூவிற்குள் அரிசி இருக்கும். இந்த பூ பூத்த பின்னர் அந்த மூங்கில் மரம் பட்டுவிடும்.

மூங்கில் அரிசி பச்சை நிறம் கொண்டது. இனிப்பு சுவை கொண்ட மூங்கில் அரிசி உறுதியானது மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்தது. நமது உடலில் தோன்றும் வாத, பித்த, கப தோஷங்களை சரி செய்வதுடன் உடலில் உள்ள நச்சுக்களையும் நீக்கும்.

உடலுக்கு வலிமை தருகின்ற அரிசி வகைகளில் இதுவும் ஒன்றாகும். நாம் வழக்கமான அரிசியில் செய்யும் அத்தனை உணவுகளையும் இந்த மூங்கில் அரிசியிலும் செய்ய முடியும்.

மூங்கில் அரிசியில் ஏராளமான கலோரிகள் உள்ளது. ஒரு கப் அளவுள்ள மூங்கில் அரிசியில் மட்டும் 160 கலோரிகள் நிறைந்துள்ளது. மேலும் கார்போஹைட்ரேட்ஸ், புரத சத்து, மெக்னீசியம், காப்பர், ஜிங்க், தயமின். ரிபோப்ளோவின், போன்ற உடலுக்கு தேவையான கனிமசத்துக்கள் நிறைந்துள்ளது.

மூங்கில் அரிசியில் செய்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் பெண்களின் மாதவிடாய் கோளாறுகள், ஆஸ்துமா போன்ற நோய்கள் குணமாகின்றது. மேலும் உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும், கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் வைட்டமின் குறைபாடுகளை நீக்கும் தன்மை கொண்டது. எனவே கர்ப்பமான பெண்கள் விரும்பும் வகையிலான மூங்கில் அரிசி உணவுகளை செய்து சாப்பிட செய்யலாம்.

மூங்கில்  அரிசியை சமைத்து சாப்பிட்டு வர உடல் இறுகி உடல் வலு பெரும். இது உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. சர்க்கரை நோயால் கட்டான உடலை இழந்தவர்கள் கூட சீரான உடலமைப்பை பெற மூங்கில் அரிசி உதவும்.

குழந்தைபேறு உருவாக்குவதில் மூங்கில் அரிசி முக்கிய பங்கு வகிக்கிறது. பழங்குடி மற்றும் மலைவாழ் மக்களில் குழந்தை இல்லாதவர்கள் மிகவும் குறைவு. இதற்கு அவர்கள் உண்ட மூங்கில் அரிசியும் ஒரு மிக முக்கிய காரணம்.

உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும் ஆற்றல் இந்த அரிசிக்கு உண்டு. அதிக பசி ஏற்படாமல் தடுக்கும். இந்த அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டால் கழுத்து வலி, இடுப்பு வலி போன்றவை சரியாகும். நார்ச்சத்து மிக்கது, உடல் வலிமை பெரும், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும், எலும்பை உறுதியாக்கும், நரம்புத் தளர்ச்சியை சரி செய்யும்.
Tags:    

Similar News