ராமநாதபுரம் மாவட்டத்தில் 55 பயனாளிகளுக்கு ரூ.14 லட்சம் நலத்திட்ட உதவி - கலெக்டர் வழங்கினார்
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே எஸ்.டி.சேதுராஜபுரம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் கலெக்டர் வீர ராகவராவ் பங்கேற்று பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் 55 பயனாளிகளுக்கு ரூ.14.08 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசும்போது, தற்போது மழைக்காலம். எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுசுகாதாரத்தை மேம்படுத்திடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எடுக்கப்படுகின்றன. அவற்றின் மூலமாக மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு மழைக்காலங்களில் ஏற்படும் காய்ச்சலை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
மழைக்காலங்களில் ஏற்படுகின்ற டெங்குக்கொசு உற்பத்தியினை கண்டறிந்து அழித்திட மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றார்.
நிகழ்ச்சியில், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் சிவசங்கரன், பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் (பொ) ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் ப்ராங்க்ளின் கிறிஸ்டோபர், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் கேசவதாசன், உதவி ஆட்சியர் (பயிற்சி) சரவணக்கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சேக் அப்துல்லா, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் பாலாஜி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கயல்விழி, கடலாடி வட்டாட்சியர் முத்துக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் அன்புக்கண்ணன் உட்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.