செய்திகள்
திருப்பூர் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் போராட்டம்
குடிப்பதற்கு கூட வீட்டில் தண்ணீர் இல்லாததால் மிகவும் சிரமமாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூர் ஊராட்சி அறிவொளிபுதூர் திருவள்ளுவர் நகர் பகுதியில் சீரான குடிநீர் வழங்கப்படுவதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் சீரான குடிநீர் கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை 50-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று காலை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து வந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். ஆனால் பொதுமக்கள் தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்:-
எங்கள் பகுதியில் குடியிருப்பு பகுதிகள் அதிகம் உள்ளது. ஆனால் குடிநீர் சீராக கிடைப்பதில்லை. இதனால் குடிநீர் தேடி அலைய வேண்டிய நிலை உள்ளது. குடிப்பதற்கு கூட வீட்டில் தண்ணீர் இல்லாததால் மிகவும் சிரமமாக உள்ளது. எங்கள் கோரிக்கையை ஏற்று கூடுதலாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.