வியாபாரியிடம் வழிப்பறி வாலிபர்கள் 2 பேர் கைது
கோவை:
கோவை துடியலூரை அடுத்த ஜி.என். மில் பகுதியை சேர்ந்தவர் அய்யாசாமி (வயது 37). காய்கறி வியாபாரி. இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் கவுண்டம்பாளையம் பகுதியில் சென்றார். அப்போது அங்கு வந்த வாலிபர்கள் 2 பேர் திடீரென அவரை வழிமறித்தார்.
அவர்கள் அய்யாசாமியை மிரட்டி பணம் தருமாறு கூறினார். அப்போது அய்யாசாமி தன்னிடம் பணமில்லை என்றார். உடனே அந்த வாலிபர்கள் அவரின் பாக்கெட்டில் இருந்த பணத்தை வழிப்பறி செய்து அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சி செய்தனர்.
அதிர்ச்சி அடைந்த அய்யாசாமி சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களுடன் சேர்ந்து அய்யாசாமி அந்த வாலிபர்களை மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை துடியலூர் போலீசில் ஒப்படைத்தார்.
போலீஸ் விசாரணையில் அவர்கள் கவுண்டம்பாளையம் ஸ்ரீ நகரை சேர்ந்தவர் நாகராஜ் (25) மற்றும் அவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் நாகராஜ் மீது துடியலூர் போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகள் உள்ளது தெரியவந்தது.