இந்தியா
காஷ்மீருக்குள் ஊடுருவ காத்திருக்கும் 135 பயங்கரவாதிகள்- எல்லை பாதுகாப்பு படை தகவல்
கடந்த ஆண்டு நடைபெற்ற 58 ஊடுருவல் முயற்சிகளில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்:
பாகிஸ்தான் பகுதியை ஒட்டிய காஷ்மீருக்குள் 135 பயங்கரவாதிகள் ஊடுருவ காத்திருப்பதாக காஷ்மீர் எல்லை பாதுகாப்பு படை ஐ.ஜி. ராஜா பாபு சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறியதாவது:-
இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபிறகு, எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பொதுவாக அமைதி நிலவுகிறது.
முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது கடந்த ஆண்டில் பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவும் சம்பவங்களும் குறைந்திருக்கிறது.
2019-ம் ஆண்டில் 130 பேர் ஊடுருவி இருந்தனர். கடந்த 2020-ம் ஆண்டில் 36-ஆக ஊடுருவல் குறைந்தது. கடந்த ஆண்டில் 31 பேர்தான் ஊடுருவியிருக்கிறார்கள்.
கடந்த ஆண்டில் 58 ஊடுருவல் முயற்சிகள் நடைபெற்றது. இதில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், 21 பேர் திரும்பிச் சென்றிருக்கிறார்கள், ஒருவர் சரணடைந்திருக்கிறார்.
மேலும், பயங்கரவாதிகளிடம் இருந்து 3 ஏ.கே.47 துப்பாக்கிகள், 6 கைத்துப்பாகிகள், ஆயிரத்து 71 வெடிபொருட்கள், 20 கையெறிகுண்டுகள், 2 வெடிகுண்டுகள் மற்றும் ரூ.88 கோடி மதிப்புள்ள 17.3 கிலோ ஹெராயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டன.
இந்த ஆண்டு காஷ்மீருக்குள் 135 பயங்கரவாதிகள் ஊடுருவ இருப்பதாக தெரியவந்துள்ளது. காஷ்மீர் எல்லைப் பகுதியில் திவீரவாதிகள் ஊடுருவலை முற்றிலுமாக தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. இந்த விஷயத்தில் ராணுவம், எல்லை பாதுகாப்பு படை இடையே நல்ல ஒத்துழைப்பு நிலவுகிறது.
இவ்வாறு ஐ.ஜி ராஜா பாபு சிங் கூறினார்.