ஆன்மிகம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத்தேர் திருவிழாவுக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத்தேர் திருவிழாவுக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது

Published On 2021-01-19 06:39 GMT   |   Update On 2021-01-19 06:39 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பூபதி திருநாள் எனப்படும் தைத்தேர் திருவிழாவையொட்டி தைத்தேரில் முகூர்த்தக்கால் நடப்பட்டது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பூபதி திருநாள் எனப்படும் தைத்தேர் திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 5.30 மணி முதல் 6.15 மணிக்குள் தனுர் லக்னத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழா வருகிற 29-ந்தேதி வரை 11 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 27-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, தெற்கு உத்திரை வீதியில் உள்ள தைத்தேரில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. முகூர்த்தக்காலை இணை ஆணையர் அசோக்குமார் (கூடுதல் பொறுப்பு) , உதவிஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள் சீனிவாசன், கவிதா ஜெகதீசன், ரெங்காச்சாரி மற்றும் ஊழியர்கள் தேரில் நட்டனர்.

தைத்தேர் திருவிழாவையொட்டி தினமும் காலையும், மாலையும் வெவ்வேறு வாகனங்களில் நம்பெருமாள் உத்திரைவீதிகளில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். விழாவின் இரண்டாம் நாளான நாளை(புதன்கிழமை) காலை நம்பெருமாள் ஒற்றை பிரபை வாகனத்திலும், மாலை ஹம்ச வாகனத்திலும் வீதியுலா வருகிறார்.

நாளை மறுநாள்(வியாழக்கிழமை) காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும், 22-ந்தேதி காலை இரட்டை பிரபை வாகனத்திலும், மாலை கருட வாகனத்திலும்,23-ந்தேதி காலை சேஷ வாகனத்திலும், மாலை ஹனுமந்த வாகனத்திலும், 24-ந்தேதி காலை கற்பக விருட்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் வீதியுலா வருகிறார்.

வருகிற 25-ந்தேதி நெல் அளவை கண்டருளிகிறார். 26-ந் தேதி மாலை குதிரை வாகனத்தில் நம்பெருமாள் வையாளி கண்டருளுகிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 27-ந்தேதி காலை நடைபெறுகிறது.

அன்று நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அதிகாலை 3.45 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபத்திற்கு 4.30 மணிக்கு வருகிறார். 4.45 மணிமுதல் 5.15 மணிவரை ரதரோஹணம் (தனுர் லக்னத்தில்) நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின் காலை 6 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. தேர் நான்கு உத்திரை வீதிகளில் வலம் வந்து பின்னர் நிலையை அடைகிறது.

28-ந்தேதி சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடக்கிறது. நிறைவு நாளான 29-ந் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி உள்வீதிகளில் வலம் வருகிறார். அத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
Tags:    

Similar News