தொழில்நுட்பம்
விரைவில் இந்தியா வரும் போக்கோ 5ஜி ஸ்மார்ட்போன்
போக்கோ பிராண்டின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் பிஐஎஸ் வலைதளத்தில் சான்று பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் பிஐஎஸ் மற்றும் அமெரிக்காவின் எப்சிசி வலைதளங்களில் இடம்பெற்று இருக்கிறது. பிஐஎஸ் தளத்தில் இடம்பெற்று இருப்பதால், இந்த மாடலின் இந்திய வெளியீடு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. எப்சிசி வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் தெரியவந்துள்ளது.
அதன்படி போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 10 5ஜி வேரியண்டின் ரி-பிராண்டு செய்யப்பட்ட மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. முந்தைய தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் ரெட்மி 20எக்ஸ் பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்டது.
தற்போதைய தகவல்களின் படி போக்கோ எம்3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் பிஐஎஸ் மற்றும் எப்சிசி வலைதளங்களில் முறையே M2103K19PI மற்றும் M2103K19PG மாடல் நம்பர்களை கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இதில் M2103K19PG மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் கடந்த மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகமான ரெட்மி நோட் 10 5ஜி மாடலுடன் ஒற்றுப்போவதாக கூறப்படுகிறது.
எப்சிசி வலைதள விவரங்களின் படி இரு மாடல்களிலும் பெருமளவு வித்தியாசங்கள் இல்லை என தெரியவந்துள்ளது. மேலும் போக்கோ எம்3 ப்ரோ 5ஜி மாடலில் 22 வாட் பாஸ்ட் சார்ஜிங், எம்ஐயுஐ 12 மற்றும் ப்ளூடூத் 5.1 போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது.