ஆன்மிகம்
மாய மோகினி சொரூப அலங்காரத்தில் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளிய காட்சி.

பிரம்மோற்சவ விழா: மோகினி அலங்காரத்தில் உற்சவர் மலையப்பசாமி வீதிஉலா

Published On 2019-10-05 04:21 GMT   |   Update On 2019-10-05 04:21 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவில் மோகினி அலங்காரத்தில் உற்சவர் மலையப்பசாமி பல்லக்கில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. தினமும் காலை, இரவு பல்வேறு வாகனச் சேவைகள் நடந்து வருகின்றன. விழாவின் 5-வது நாளான நேற்று காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை பல்லக்கு வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி “மாய மோகினி சொரூப” அலங்காரத்தில் எழுந்தருளினார். அத்துடன் தங்கத் திருச்சி வாகனத்தில் உற்சவர் ஸ்ரீகிருஷ்ணர் எழுந்தருளினார்.

பாற்கடலை கடைந்தபோது, அதில் இருந்து வெளி வந்த அமிர்தத்தை யாருக்குப் பரிமாற வேண்டும் என்ற கேள்வி எழுந்தது. அமிர்தத்தைப் பருக அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. அதைத் தடுக்க விரும்பிய திருமால், “மோகினி அலங்காரம்” எடுத்து அசுரர்களை திசைத் திருப்பி தேவர்களை அமிர்தம் பருக வழிவகுத்தார்.

திருமலையில் எழுந்தருளியிருக்கும் திருமாலாகிய உற்சவர் மலையப்பசாமி தங்க, வைர நகைகள் அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளி வலது காலை மடித்து, இடது காலை குத்திட்டு, அதன் மீது இடது கையை நீட்டி வைத்துக்கொண்டு அமர்ந்தபடி, “மாய மோகினி சொரூப” அலங்காரத்தில் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாய மோகினி சொரூப அலங்கார அருட் வீச்சு பக்தர்கள் மீது நேரடியாக விழாமல் இருக்க உற்சவரின் நேர் எதிரே ரசம் பூசப்பட்ட நிலை கண்ணாடி ஒன்று பொருத்தப்பட்டு இருந்தது.

வாகன வீதிஉலாவுக்கு முன்னால் சிவன், திருமால், மோகினி, மகாலட்சுமி மற்றும் மட்ச, கூர்ம, வராக, வாமன, நரசிம்ம, ஸ்ரீகிருஷ்ண, ராமர், பரசுராம, கல்கி உள்ளிட்ட அவதாரத்தில் பக்தர்கள் வேடமிட்டு மாடவீதிகளில் ஊர்வலமாக வந்தனர். அமிர்தம் வேண்டி மந்தார மலையை மத்தாக வைத்து, வாசுகி என்னும் பாம்பை தேவர்களும், அசுரர்களும் பிடித்து, பாற்கடலை கடைந்த காட்சிகளை பக்தர்கள் செய்து காட்டினர்.

அதைத் தொடர்ந்து மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணிவரை உற்சவர்களுக்கு ஸ்நாபன திருமஞ்சனம், மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணிவரை ஊஞ்சல் சேவை நடந்தது. பின்னர் உற்சவர் மலையப்பசாமி கோவிலில் இருந்து அலங்கார மண்டபத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு, கருடசேவைக்கான பிரத்யேக அலங்காரம் செய்யப்பட்டது. 
Tags:    

Similar News