செய்திகள்
மணல்மேடு அருகே கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
மணல்மேடு அருகே 27 மாத ஊதியத்தை வழங்க வலியுறுத்தி கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மணல்மேடு:
மணல்மேட்டை அடுத்த தலைஞாயிறு பகுதியில் என்.பி.கே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலை கடந்த சில ஆண்டுகளாக இயக்கவில்லை. இந்த நிலையில் சர்க்கரை ஆலையில் பணி புரியும் தொழிலாளர்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலை வளாகத்தில் நடந்த போராட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. சங்க செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் ரவீந்திரன், துணை செயலாளர் ராமானுஜம் ஆகியோர் போராட்டத்தை தொடங்கி வைத்தனர். இதில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த 27 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். சர்க்கரை ஆலையை உடனே இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வு பெற்ற அனைத்து ஊழியர்களுக்கும் பணப்பயன், ஓய்வூதியம் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.