செய்திகள்
பிளாஸ்டிக் கழிவு சாலை திட்டம் விரிவுபடுத்தப்படுமா?
பிளாஸ்டிக் கழிவுகள் கொண்டு போடப்படும் சாலைக்கு பிரத்தியேக உபகரணங்கள் மற்றும் அதிக வெப்பம் தரக்கூடிய பாய்லர்கள் தேவை.
திருப்பூர்:
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் கழிவுகள் கொண்டு சாலைகள் அமைக்கும் திட்டம் சில ஆண்டுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இத்திட்டம் குறைந்த அளவு பயன்பாட்டில் மட்டுமே உள்ளது.
இதுகுறித்து பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக பொறியாளர் கற்பகம் கூறியதாவது:
பிளாஸ்டிக் கழிவுகள் கொண்டு போடப்படும் சாலைக்கு பிரத்தியேக உபகரணங்கள் மற்றும் அதிக வெப்பம் தரக்கூடிய பாய்லர்கள் தேவை. அவை இங்குள்ள ஒப்பந்ததாரர்களிடம் இல்லை. சாதாரண பாய்லர்களில் பிளாஸ்டிக் கழிவுகள் உருகுவதில்லை என்பதால் சாலை பணி மேற்கொள்வதில் சிரமம் உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், பல்லடம், உடுமலை, குடிமங்கலம் உள்ளிட்ட பல இடங்களில் கழிவு பிளாஸ்டிக் சாலை போடப்பட்டுள்ளது. பல்லடம் அருகே கழிவு பிளாஸ்டிக் கொண்டு, கடந்த 2014ம் ஆண்டு போடப்பட்ட சாலை இன்னும் சேதமடையாமல் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.