பாராஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பன், குடும்பத்துடன் பழனி கோவிலில் சாமி தரிசனம்
பழனி:
பாராஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற சேலம் மாரியப்பன் தனது குடும்பத்துடன் பழனி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த பாராஒலிம்பிக் போட்டியில் சேலத்தை சேர்ந்த தடகளவீரரான மாரியப்பன் உயரம் தாண்டுதலில் போட்டியிட்டு வெள்ளி பதக்கம் வென்றார். பதக்கம் வென்று சாதனைபடைத்து தனது சொந்த ஊருக்கு திரும்பிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து மாரியப்பன் தனது குடும்பத்தினருடன் பழனி கோவிலுக்கு சாமிதரிசனம் செய்ய வந்தார்.
மதனபுரத்தில் உள்ள நாககாளியம்மன் கோவிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்து பின்னர் மலைக்கோவிலுக்கு சென்று வழிபட்டார். மேலும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கி நேர்த்திக்கடனை நிறைவேற்றினார். மாரியப்பன் பழனிக்கு வந்தது குறித்து தகவல் அறிந்ததும் ஏராளமானோர் அங்கு திரண்டு வந்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மேலும் சிலர் அவருடன் இணைந்து செல்பியும் எடுத்து கொண்டனர். இதனையடுத்து மாரியப்பன் சேலத்துக்கு புறப்பட்டு சென்றார்.