செய்திகள்
பூண்டி ஏரி

பூண்டி ஏரியில் இருந்து இன்று பிற்பகல் உபரி நீர் திறப்பு -வெள்ள அபாய எச்சரிக்கை

Published On 2021-10-10 06:21 GMT   |   Update On 2021-10-10 06:53 GMT
உபரி நீர் திறக்கப்படுவதால், கொசஸ்தலை பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
திருவள்ளூர்:

சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது.

ஏரியின் மொத்த உயரம் 35 அடி. இதன் முழு கொள்ளளவு 3231 மில்லியன் கன அடியாகும். இன்று காலை நிலவரப்படி நீர் இருப்பு 33.95 அடியாகவும் கொள்ளளவு 2807 மிலிலியன் கன அடியாகவும் உள்ளது.

காலை நிலவரப்படி நீர்வரத்து 1691 கனஅடியாக உள்ளது. தற்போது பருவ மழையினால் நீர்வரத்து தொடர்ச்சியாக அதிகரித்து உள்ளதால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

எனவே அணையின் நீர்மட்டம் விரைவில் 34 அடியை தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அம்மப்பள்ளி அணை திறக்கப்பட்டுள்ளதால் அந்த நீரும் வந்து கொண்டு இருப்பதால் பாதுகாப்பு குறித்து பூண்டி ஏரியில் இருந்து இன்று மதியம் 2 மணிக்கு உபரிநீர் திறக்கப்படுகிறது.

இதையொட்டி கொசஸ்தலை ஆற்றின் கரையோர உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

பூண்டி ஏரியில் இருந்து அணையின் பாதுகாப்பு கருதி முன்எச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பிற்பகல் 2 மணி அளவில் வினாடிக்கு 1000 கன அடி உபரி நீர் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து அதிகபடியாகும் நிலையில் கூடுதல் உபரி நீர் படிப்படியாக திறக்கப்படும்.

எனவே நீர்த்தேக்கத்திலிருந்து மிகை நீர் வெளியேறும் கொசஸ்தலையாறு செல்லும் கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம். ஒதப்பை. நெய்வேலி, எறையூர். பீமன்தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதே வன்பட்டு,மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம்.

திருக்கண்டலம். ஆத்தூர், பண்டிக்காவனுர் ஜெகநாதபுரம், புதுகுப்பம். கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், அசூவன்பாளையம். மடியூர், சீமாவரம். வெள்ளி வாயல்சாவடி, நாப்பாளையம், இடையான்சாவடி, மணலி. மணலி புதுநகர், சடையான்குப்பம், எண்ணுர் மற்றும் கொசஸ்தலையாற்றின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை தருமாறும் மேலும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை எடுக்கமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News