செய்திகள்
சுப்ரீம் கோர்ட்டு

கார்த்தி சிதம்பரம் மேல்முறையீடு மனு : வருமான வரித்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Published On 2020-11-16 18:53 GMT   |   Update On 2020-11-16 18:53 GMT
கார்த்தி சிதம்பரம் மேல்முறையீடு மனு தொடர்பாக பதில் அளிக்க வருமான வரித்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகனும் காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் சென்னையை அடுத்துள்ள முட்டுக்காட்டில் தங்களுக்கு சொந்தமான சொத்தை கடந்த 2015-ம் ஆண்டு விற்பனை செய்தனர்.

இந்த நில விற்பனை மூலம் கிடைத்த வருமானத்தை குறைத்து வருமானவரி கணக்கு தாக்கல் செய்ததாக இருவர் மீதும் குற்றம் சாட்டி, சென்னை எழும்பூர் கோர்ட்டில் வருமான வரித்துறை கடந்த 2018-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.

கார்த்தி சிதம்பரம் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. இதில் இருந்து தங்களை விடுவிக்கக்கோரி சிறப்பு கோர்ட்டில் இருவரும் தாக்கல் செய்த மனு கடந்த ஜனவரி மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து, தங்களை விடுவிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் இருவரும் மனு தாக்கல் செய்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த சென்னை ஐகோர்ட்டு, கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதியை வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது என்றும், இவர்கள் மீதான வழக்கின் விசாரணையை சிறப்பு கோர்ட்டு மேற்கொள்ளலாம் என்றும் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி சார்பில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மேல்முறையீடு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தன.

மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி, சிறப்பு கோர்ட்டுக்கு வழக்குகள் மாற்றப்பட்டுள்ளது பாகுபாடு காட்டும் வகையில் உள்ளது என வாதிட்டார்.

வருமானவரித்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த மனுவின் நகலை எங்களுக்கு அளியுங்கள் நாங்கள் பதில் அளிக்கிறோம் என தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள் இந்த மேல்முறையீடு மனுக்கள் மீது இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர்.
Tags:    

Similar News