செய்திகள்
விபத்து

நெல்லை அருகே பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து

Published On 2021-04-29 09:05 GMT   |   Update On 2021-04-29 09:05 GMT
நெல்லை அருகே இன்று அதிகாலையில் பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் சிறு காயங்களுடன் தப்பினார்.

நெல்லை:

சென்னை எண்ணூரில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு பெட்ரோல் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று வந்தது.

லாரியை காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த மேல தண்டையை சேர்ந்த ஜெகத்ரட்சகன்(வயது 28) என்பவர் ஓட்டி வந்தார்.

இன்று அதிகாலை நெல்லை மாவட்டம் பணகுடியை அடுத்த பழவூர் அருகே நான்கு வழிச்சாலையில் லாரி சென்றபோது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் சிறு காயங்களுடன் தப்பினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பழவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வள்ளியூர் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு வந்து டேங்கரில் பெட்ரோல் கசிவை சரிசெய்தனர். தொடர்ந்து 3 பொக்லைன் எந்திரங்கள் மூலம் டேங்கர் லாரியை மீட்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டனர். 

Tags:    

Similar News