செய்திகள்
சாலை மறியல்

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2020-11-22 21:41 GMT   |   Update On 2020-11-22 21:41 GMT
கொருக்குப்பேட்டையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பூர்:

சென்னை கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர், சிகரந்தபாளையம், பாரதி நகர் ஆகிய பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் குடிநீர் வாரியம் சார்பில் குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்து வந்தனர்.

ஆனால் கடந்த சில நாட்களாக குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. அதற்கு பதிலாக லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. ஆனால் லாரிகள் மூலமும் சரிவர குடிநீர் வழங்கப்படாததால் குடிநீர் இன்றி பொதுமக்கள் அவதிப்பட்டனர். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து முறையிட்டும் பலனில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி குடியிருப்புவாசிகள் நேற்று காலை ஆண்கள், பெண்கள் உட்பட 60-க்கும் மேற்பட்டோர் மீனாம்பாள் நகர் பாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஆர்.கே. நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாவிஷ்ணு மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.

பின்னர் குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் பேசி, லாரிகள் மூலம் உடனடியாக அந்த பகுதிகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்யவும் இன்ஸ்பெக்டர் ஏற்பாடு செய்தார்.
Tags:    

Similar News