ஆன்மிகம்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா தொடங்கியது

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா தொடங்கியது

Published On 2021-10-07 04:15 GMT   |   Update On 2021-10-07 04:15 GMT
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா நேற்று தொடங்கியது. இந்த விழா பக்தர்கள் இன்றி மிகவும் எளிய முறையில் நடந்தது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா நேற்று தொடங்கியது. இதனையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், காலை 6 மணிக்கு அலங்கார தீபாராதனை, 9.30 மணிக்கு கொலுமண்டபத்திற்கு அம்மன் எழுந்தருளிய நிகழ்ச்சி போன்றவை நடைபெற்றது. இதனையொட்டி மூலஸ்தானத்தின் அருகில் உள்ள மண்டபத்தில் இருந்து அம்மனை மேளதாளம் முழங்க கோவில் உள் பிரகாரத்தை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்து கொலு மண்டபத்தில் எழுந்தருளச் செய்தனர். கொலு மண்டபத்தில் சாமி சிலைகள் மற்றும் பொம்மைகள் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.

அதனைத் தொடர்ந்து காலை 11 மணிக்கு அம்மன் சந்தனகாப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு அம்மன் வெள்ளி கலைமான் வாகனத்தில் கோவிலை மூன்று முறை வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த விழா பக்தர்கள் இன்றி மிகவும் எளிய முறையில் நடந்தது.
Tags:    

Similar News