செய்திகள்
வெயில்

தமிழகத்தில் உள்மாவட்டங்களில் இன்றும், நாளையும் வெயில் அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம்

Published On 2021-05-01 00:06 GMT   |   Update On 2021-05-01 00:06 GMT
சென்னையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதே நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் திருச்சி, மதுரை, கடலூர், கரூர், சேலம், வேலூர் உள்பட மாவட்டங்களில் கத்திரி வெயில் காலம் 4-ந்தேதி தொடங்கும் நிலையில் கோடை வெயில் 100 டிகிரிக்கு மேல் கொளுத்தி வருகிறது. தலைநகர் சென்னையிலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதே நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 1-ந் தேதி (இன்று), 2-ந் தேதி (நாளை) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் சேலம், தர்மபுரி, ஈரோடு, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். தமிழக உள் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக நிலவிய அதிகபட்ச வெப்பநிலை அடுத்து வரும் 2 நாட்களுக்கு (இன்றும், நாளையும்) இயல்பைவிட 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி (இன்றும், நாளையும்) நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News