கடலூர் மாநகராட்சியில் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றும் பணி- மேயர் சுந்தரி ராஜா தொடங்கி வைத்தார்
கடலூர்:
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டி விழிப்புணர்வு பேரணி கடலூர் கடற்கரை சாலையில் நடைபெற்றது. இதற்கு மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமை தாங்கி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
துணை மேயர் தாமரைச்செல்வன், நகர்நல அலுவலர் டாக்டர் அரவிந்த் ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தார். பின்னர் மாநகராட்சி ஊழியர்கள் ஊர்வலமாக பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.
பின்னர் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகளை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் துணைமேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி அதிகாரிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள் அப்புறப்படுத்தினர்.
அப்போது மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, மண்டல தலைவர்கள் பிரசன்னா, சங்கீதா செந்தில், சங்கீதா, மாநகராட்சி கவுன்சிலர்கள் சாய்துனிஷா சலீம், ஏ.ஜி.எம்.வினோத்குமார், கிரேசி, தஷ்ணா, சுரேஷ்குமார், சரவணன், செந்தில்குமாரி இளந்திரையன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.