பயங்கரவாதிகளுடன் தொடர்பு - கோவையில் மேற்கு வங்க வாலிபரிடம் விசாரணை
கோவை:
இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் பண்டிகையின் போது தேவாலயங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஜக்ரன்ஹசீம் என்ற பயங்கரவாதியுடன் தொடர்பில் இருந்ததாக கோவையை சேர்ந்த முகமது அசாருதீன், அகரம் ஜிந்தா, இதயத்துல்லா, அபுபக்கர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது தாக்குதல் நடத்த பாகிஸ்தான், இலங்கையை சேர்ந்த பயங்கரவாதிகள் 6 பேர் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது.
இந்த பயங்கரவாதிகள் கோவையில் பதுங்கி இருந்து தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஒரு வாரத்துக்கு பிறகே இயல்பு நிலை திரும்பியது.
ஆனாலும் கோவை மாநகர போலீசார் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் யாரேனும் தொடர்பு வைத்து உள்ளார்களா? என கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் கோவை இடையர் வீதியில் உள்ள செல்போன் கடைக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் வாலிபர் ஒருவர் தனது செல்போனை பழுது பார்க்க கொடுத்தார். அதனை வாங்க அந்த வாலிபர் வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த செல்போன் கடைக்காரர் அதனை ஆய்வு செய்த போது அதில் துப்பாக்கி குறித்து தகவல்கள் பரிமாறப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த செல்போன் கடை உரிமையாளர் இது குறித்து மாநகர போலீசில் புகார் செய்தார். போலீசார் அந்த செல்போனை வாங்கி ஆய்வு செய்த போது அதன் உரிமையாளர் கோவை இடையர் வீதியில் வசித்து வரும் பாரூக் கவுசீர் (25) என்பது தெரியவந்தது.
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த இவர் இங்கு தங்கி நகை பட்டறையில் வேலை செய்து வந்துள்ளார். இவர் பாகிஸ்தானை சேர்ந்த முஜாகிதின் என்ற வாட்ஸ்- அப் குழுவில் இணைந்து செயல்பட்டு வந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த குழுவில் துப்பாக்கி தொடர்பான தகவல்களை அவர் பரிமாறி இருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து பாரூக் கவுசீரை கோவை மாநகர போலீசார்விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் இவருக்கு தொடர்பு உள்ளதா? பாகிஸ்தான் குழுக்களுடன் துப்பாக்கி செயல்பாடு குறித்து அவர் ஏன் பதிவு செய்தார் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.
கோவை சுக்கிரவார் பேட்டையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பவானி சிங் என்பவர் அறையில் இருந்து 2 கைதுப்பாக்கி மற்றும் தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தலைமைறைவாக உள்ள அவரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் பாகிஸ்தான் வாட்ஸ்அப் குழுக்களுடன் தொடர்பில் இருந்த மேற்கு வங்க வாலிபர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.