செய்திகள்
மாணவி கொலை

மதுரையைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவி கொலை - போலீசார் விசாரணை

Published On 2019-10-14 07:44 GMT   |   Update On 2019-10-14 07:44 GMT
மதுரையைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவி கடத்திச் சென்று கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்:

மதுரை செல்லூரைச் சேர்ந்த கூலி தொழிலாளியின் 16 வயது மகள் பிளஸ்-1 படித்து வந்தார். இவரது பாட்டி வீடு சேடப்பட்டி போலீஸ் சரகத்துக்குட்பட்ட ஓனாம்பட்டியில் உள்ளது.

அங்கு கடந்த சில நாட்களாக மந்தையம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதனை காண மாணவி பாட்டி வீட்டுக்கு சென்றார்.

நேற்று மதியம் வீட்டில் இருந்து மாணவி கோவிலுக்கு சென்று வருவதாக புறப்பட்டு சென்றார். அதன் பிறகு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் அச்சம் அடைந்த உறவினர்கள் கோவிலுக்கு சென்று பார்த்தனர். அங்கு மாணவியை காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து மாணவியின் உறவினர்கள் சேடப்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை யாராவது கடத்தி சென்று இருக்கலாமா? அல்லது வேறு ஏதும் பிரச்சினையா? என தீவிர விசாரணையில் இறங்கினர்.

இந்த நிலையில் இன்று காலை ஓனாம்பட்டி கண்மாய் கரை பாறை பகுதியில் ரத்த வெள்ளத்தில் பெண் உடல் கிடப்பதை அந்த வழியே சென்றவர்கள் பார்த்தனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடம் விரைந்தனர். உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் பிணமாக கிடந்தது மாயமான மாணவி என தெரியவந்தது.

உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் மாணவி கற்பழித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

மாணவி கோவிலுக்கு சென்றது முதல் அவர் மாயமானது வரை போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.

அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர் மாணவியை கடத்தி சென்று கற்பழித்து கொலை செய்து இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News