செய்திகள்
விஷம்

வடமதுரை அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை

Published On 2020-09-17 04:03 GMT   |   Update On 2020-09-17 04:03 GMT
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடமதுரை:

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த செங்குறிச்சி அருகே திருமலைக்கேணி முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கிரிவலப்பாதையில் நேற்று காலை ஒரு ஆண் மற்றும் பெண் இறந்து கிடந்தனர். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜகணேஷ், ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

உடல்கள் அருகே கிடந்த பையை போலீசார் கைப்பற்றினர். அதில் ரேஷன் கார்டு ஒன்று இருந்தது. அந்த கார்டில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நீரேத்தான் பகுதியை சேர்ந்த ஜெயசெந்தில் என்று இருந்தது. அதன் மூலம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இறந்த பெண், நீரேத்தான் பகுதியை சேர்ந்த ஜெயசெந்தில் மனைவி வித்யா (வயது 26) என்பதும் அவருடன் இறந்த நபர், வாடிப்பட்டி அருகே உள்ள தாதன்பட்டியை சேர்ந்த சப்பாணி மகன் மணி (32) என்பதும் தெரிய வந்தது. மணி சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். மணிக்கும், வித்யாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இது மணியின் மனைவிக்கு தெரிந்ததும் வாடிப்பட்டி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து ஜெயசெந்திலும் தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த கள்ளக்காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி திருமலைக்கேணி முருகன் கோவிலுக்கு வந்தனர். அங்கு இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News