ஆன்மிகம்
நடராஜரை விரதம் இருந்து வழிபாடு செய்தால் கலைத்துறையில் பிரகாசிக்கலாம்
நடனக் கலையில் சிறந்து விளங்க வேண்டுமென்று விரும்புபவர்கள், நாடகம் மற்றும் கலைத்துறையில் பிரகாசிக்க வேண்டுமென்று விரும்புபவர்கள் நடராஜப் பெருமான் வழிபாட்டை முறையாக மேற்கொள்ள வேண்டும்.
நடனக் கலையில் சிறந்து விளங்க வேண்டுமென்று விரும்புபவர்கள், நாடகம் மற்றும் கலைத்துறையில் பிரகாசிக்க வேண்டுமென்று விரும்புபவர்கள் நடராஜப் பெருமான் வழிபாட்டை முறையாக மேற்கொள்ள வேண்டும். சிவாலயங்களில் சிவகாமியம்மன் சமேத நடராஜப் பெருமான், சிவன் சன்னிதிக்கு அருகிலேயே இருப்பார். முயலகனை வதம் செய்த கோலத்தோடு கால் தூக்கி ஆடும் அந்த இனிய காட்சியை நாம் கண்டு மகிழ வேண்டும்.
ஆனிக்கு அடுத்து வரக்கூடிய மாதம் ஆடி மாதமாகும். ஆடி.. ஓடி.. சம்பாதிக்கும் வாழ்க்கையில், மற்றவர்கள் வியக்கும் விதத்தில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள ஆனி மாதத்தில் வரும் நடராஜர் தரிசனம் நமக்கு வழிகாட்டுகிறது.
மிதுனம் நவக்கிரகங்களில் புதனுக்கு சொந்த வீடாகும். புதன் கல்விக்குரிய கிரகமாகக் கருதப்படுகிறது. எனவே இம்மாதத்தில் நடைபெறும் நடராஜர் தரிசனம் போன்ற விழாக்களில் கலந்துகொண்டால் படிப்பில் முதன்மை பெற வழிவகுக்கும். மண்ணில் நல்ல வண்ணம் வாழ, வழிபாடு ஒன்றுதான் வழிவகுக்கும்.
‘குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவழம்போல் மேனியில் பால் வெண்ணீரும்
இனித்தமுடைய எடுத்தபொற் பாதமும் காணப் பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்தமாநிலத்தே’
என்று முன்னோர்கள் கூறிய முத்தான வரிகளை எண்ணிப் பார்க்க வேண்டும். ‘மனிதப்பிறவி எடுத்ததன் பயனே இறைவனுடைய அழகைக் காண்பதற்காகத்தான்’ என்கிறார்கள். அந்த இறைவன் தரிசனம் தரும் நாளில் நாம் உள்ளன்போடு வழிபட்டு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்வோம்.
சிவபெருமானுக்குரிய இரண்டு தரிசனங்களில் முதல் தரிசனம் ஆனி மாதத்திலும், இரண்டாவது தரிசனம் மார்கழி மாதத்திலும் நடைபெறும். அதில் வருடத் தொடக்கத்தில் வரும் ஆனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தன்று நடராஜர் அபிஷேகம் நடைபெறும். இந்த மாதத்தில் ஆடலரசனைப் பாடிப் பணிந்து வழிபட்டால் கோடி கோடியாய் நன்மை கிடைக்கும். அன்று சிவபுராணம் பாடி இறைவனைத் தரிசித்தால் சிந்தையில் நினைத்த காரியங்கள் சிறப்பாக நிறைவேறும். வந்த துயரங்கள் வாயிலோடு நின்றுவிடும். எந்தக் குறைபாடாக இருந்தாலும் அதை அகற்றும் ஆற்றல், இறை வழிபாட்டிற்கு உண்டு. ஆனால் அதற்கு நம்பிக்கை என்பது அவசியம்.
அந்த நம்பிக்கையை முழுமையாக நடராஜர் மீது வைக்க வேண்டிய மாதம் ஆனி மாதமாகும். நடராஜரை ‘தில்லைக் கூத்தன்’ என்றும், ‘ஆடலரசன்’ என்றும், ‘கூத்தபிரான்’ என்றும் அழைப்பது வழக்கம். ஆடிய பாதத்தோடு நீடிய கருணைகொண்டு வாழ்வை வளப்படுத்துபவர் நடராஜப் பெருமான். கலைகளைக் கற்று காசினியெங்கும் புகழ்பெற வேண்டுமென்று விரும்புபவர்கள் நடராஜப் பெருமானை முழுமையாக வழிபட வேண்டும்.
சிவராத்திரியன்று சிவனை வழிபடும்போது, இரவு முழுவதும் விழித்திருந்து சிவபுராணம் பாடி சிவாலயங் களுக்குச் சென்று வழிபடுவது வழக்கம். ஆனால் ஆனி மாதத்திலும், மார்கழி மாதத்திலும் வரும் நடராஜர் தரி சனத்தை கண்டுகளிப்பவர்கள், பகல் முழுவதும் விரதம்இருந்து சிவனுக்குரிய அபிஷேக ஆராதனைகளைக் கண்டுகளிப்பதோடு, நடராஜப் பெருமானையும் தரிசித்து அவர் சன்னிதியில் சிவபுராணம் பாடவேண்டும்.