உள்ளூர் செய்திகள்
விசைத்தறியாளர்கள் வேலைநிறுத்தம் - அதிகாரிகள் பேச்சுவார்த்தை
கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து விசைத்தறியாளர்களுக்கு கூலி உயர்த்தப்படவில்லை.
பல்லடம்:
திருப்பூர், கோவை மாவட்டத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப் படுகிறது.
இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து விசைத்தறியாளர்களுக்கு கூலி உயர்த்தப்படவில்லை.
எனவே கூலி உயர்வு வழங்ககோரி திருப்பூர், கோவை மாவட்டத்தில் விசைத்தறியாளர்கள் கடந்த 9-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
வேலை நிறுத்தத்தால் விசைத்தறி தொழிலை சார்ந்த சைசிங், நூற்பாலைகள், ஓ.இ., மில்கள், பீஸ் செக்கிங், மடிப்பு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் இத்தொழிலை சார்ந்த 5 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
இன்று 3-வது நாளாக வேலை நிறுத்தம் தொடர்கிறது. 3 நாட்கள் வேலை நிறுத்தம் மூலம் ரூ.200 கோடி அளவுக்கு காடாத்துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கூலி உயர்வு தொடர்பாக கோவை தொழிலாளர் கூடுதல் ஆணையர் அலுவலகத்தில் இன்று பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் திருப்பூர், கோவை பகுதி ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத்தறியாளர் சங்க நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.