செய்திகள்
மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி பட்டதாரி வாலிபர் பலி
மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த பட்டதாரி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
புதுச்சேரி:
புதுவை சண்முகாபுரம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது50). இவர் நகர கூட்டுறவு வங்கியில் காசாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் சந்துரு (21). பட்டதாரி. இவர் நேற்று முன்தினம் அதிகாலை தனது மோட்டார் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலையில் சென்றார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் சந்துரு தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சந்துரு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து வடக்குப்பகுதி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.