செய்திகள்
தற்கொலை

சூலூரில் அரசு பள்ளி வளாகத்தில் தொழிலாளி தற்கொலை

Published On 2021-10-05 10:49 GMT   |   Update On 2021-10-05 10:49 GMT
சூலூரில் அரசு பள்ளி வளாகத்தில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சூலூர்:

கோவை மாவட்டம் சூலூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சூலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இன்று காலை வழக்கம் போல மாணவர்களும், ஆசிரியர்களும் வேலைக்கு வந்தனர். அப்போது பள்ளி வளாகத்தில் உள்ள ஜன்னல் கம்பியில் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதை பார்த்து மாணவர்களும், ஆசிரியர்களும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக சூலூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையிலான போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்தனர். வாலிபரின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பள்ளி வளாகத்தில் தூக்கில் பிணமாக தொங்கியது தேனி மாவட்டம் உஞ்சம் பட்டியை சேர்ந்த ரமேஷ்(வயது45) என்பது தெரியவந்தது. மேலும் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேனியை சேர்ந்த கட்டிடகாண்டிராக்டர் ஒருவரிடம் வேலை கேட்டுள்ளார். அவர் ஒருவாரம் கழித்து கூப்பிடுகிறேன் வா என்று கூறியுள்ளார். இதையடுத்து ரமேஷ் வீட்டிற்கு செல்லாமல் நேராக சூலூருக்கு வந்துள்ளார். பின்னர் இங்கு பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்த அவர் நேற்று இரவு சூலூர் அரசு பள்ளி முன்பு வெகு நேரமாக சுற்றி திரிந்துள்ளார்.

பின்னர் பள்ளியின் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஆனால் அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது தெரியவில்லை.

இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News