செய்திகள்
ஆஷிஷ் மிஸ்ரா

லக்கிம்பூர் வன்முறை... விசாரணைக்கு நாளை ஆஜராகிறார் மத்திய மந்திரி மகன்

Published On 2021-10-08 10:37 GMT   |   Update On 2021-10-08 10:37 GMT
லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
லக்னோ:

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது மத்திய மந்திரி அஜய் மிஸ்ரா உடன் வந்த கார் விவசாயிகள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 2 விவசாயிகள் உயிரிழந்தனர். அதன்பின்னர் வன்முறை வெடித்தது. இதிலும் உயிரிழப்பு ஏற்பட்டது. மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர்.

விவசாயிகள் மீது மோதிய காரில் மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாகவும், அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். 



லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று காலையில் அவரை விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தர பிரதேச மாநில போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. 

இதனையடுத்து, போலீசார் புதிய சம்மன் அனுப்பினர். இது தொடர்பாக மத்திய மந்திரியின் வீட்டில் போலீசார் நோட்டீஸ் ஒட்டினர். அக்டோபர் 9ம் தேதி (நாளை) காலை 11 மணிக்கு ஆஷிஷ் மிஸ்ராவை  விசாரணைக்கு ஆஜராகும்படி அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதுபற்றி மத்திய மந்திரி அஜய் மிஸ்ரா கூறுகையில், ‘விசாரணைக்கு ஆஜராகும்படி என் மகனுக்கு நேற்று சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் உடல்நலக்குறைவு காரணமாக ஆஜராக முடியவில்லை. நாளை அவர் ஆஜராகி விளக்கம் அளிப்பார்’ என தெரிவித்தார்.

ஆஷிஷ் மிஸ்ரா நாளை விசாரணைக்கு ஆஜராகும் தகவலை உத்தர பிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

Tags:    

Similar News