செய்திகள்
ஜோ பைடன்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : அரிசோனா, விஸ்கான்சின் மாகாணங்களில் ஜோ பைடனின் வெற்றி உறுதி

Published On 2020-12-01 18:47 GMT   |   Update On 2020-12-01 18:47 GMT
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அரிசோனா மற்றும் விஸ்கான்சின் மாகாணங்களில் நடத்தப்பட்ட மறுவாக்கு எண்ணிக்கையில் ஜோ பைடன் வெற்றி பெற்றது உறுதி செய்யப்பட்டது.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 3-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்தது. இதில் நீண்ட இழுபறிக்கு பிறகு தற்போதைய ஜனாதிபதி டிரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அதிலும் குறிப்பாக தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய மாகாணங்களான பென்சில்வேனியா, அரிசோனா, விஸ்கான்சின், பிலடெல்பியா உள்ளிட்ட மாகாணங்களில் டிரம்பை பின்னுக்குத்தள்ளி ஜோ பைடன் வாக்குகளை வாரிக்குவித்தார்.

ஆனால் தேர்தலில் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து வரும் டிரம்ப், மேற்கூறிய முக்கிய மாகாணங்களில் முறைகேடுகள் செய்து ஜோ பைடன் வெற்றி பெற்றதாக குற்றம் சாட்டுகிறார்.

எனவே டிரம்பின் பிரசார குழு அந்தந்த மாகாணங்களின் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வலியுறுத்தி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன. எனினும் இந்த வழக்குகளில் டிரம்ப் தரப்பு தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது.

அந்தவகையில் அரிசோனா மற்றும் விஸ்கான்சின் மாகாணங்களில் நடத்தப்பட்ட மறுவாக்கு எண்ணிக்கையில் ஜோ பைடன் வெற்றி பெற்றது உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த இரு மாகாண அரசுகளும் ஜோ பைடன் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அவருக்கு வழங்கியுள்ளது.

விஸ்கான்சின் மாகாணத்தில் ஜோ பைடன் டிரம்பை விட 20 ஆயிரத்து 700 ஓட்டுகளையும், அரிசோனா மாகாணத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுகளையும் வாங்கி வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் இந்த 2 மாகாணங்களிலும் டிரம்ப் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News