செய்திகள்
கைது

சேலத்தில் லாரி ஏற்றி வாலிபர் கொலை- டிரைவர் கைது

Published On 2021-08-16 08:27 GMT   |   Update On 2021-08-16 08:27 GMT
சுப்ரமணியை சமாதானம் செய்ய முயன்ற ஜீவா லாரியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.
சேலம்:

சேலம் ஜங்சனை அடுத்த சோளம்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி (வயது 32). லாரி டிரைவர். இவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த குப்பன் என்வரது மகள் ஜீவிதா (26) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

தற்போது வரை குழந்தை இல்லை. இதனால் கணவன்- மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜீவிதா கோபித்து கொண்டு அருகில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் அவர் கணவர் வீட்டிற்கு வரவில்லை.

இதையடுத்து சுப்ரமணி நேற்று மனைவியை அழைத்து வருவதற்காக அருகில் உள்ள மாமனார் குப்பன் வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கு பல மணி நேரம் பேசியும் ஜீவிதாவை, சுப்ரமணியுடன் அனுப்ப குப்பன் மறுத்தார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

தகராறு முற்றியதும் ஆத்திரம் அடைந்த சுப்ரமணி தான் ஓட்டும் லாரியை எடுத்து குப்பன் வீடு மீது மோதினார். இதில் வீட்டின் ஓடுகள் இடிந்து விழுந்தது. மேலும் அந்த பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அட்டைகள் மீதும் சுப்ரமணி லாரியை ஏற்றினார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த டிரைவரான ஜீவா (26) என்பவர் சுப்ரமணியை சமாதானம் செய்ய முயன்றார். இதில் லாரியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ஜீவா பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த அந்த பகுதியினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர். உடல் நசுங்கி இறந்த ஜீவாவின் உடலை பார்த்து கதறி துடித்தனர்.

இதற்கிடையே அங்கு திரண்ட ஜீவாவின் உறவினர்கள் சுப்ரமணியை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் காயம் அடைந்த சுப்ரமணி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சுப்ரமணி மீது கொலை வழக்கு பதிவு செய்த சூரமங்கலம் போலீசார் சிகிச்சை முடிந்ததும் அவரை கைது செய்யவும் முடிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News