செய்திகள்
கோப்புபடம்

டிரைவர் கொலை - கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே தீர்த்துக்கட்டிய கொடூரம்

Published On 2020-09-15 07:44 GMT   |   Update On 2020-09-15 07:44 GMT
பண்ருட்டி கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவியே தீர்த்துக்கட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உளுந்தூர்பேட்டை:

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செஞ்சிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன்(வயது 40). லாரி டிரைவர். இவருக்கும், கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள முத்தாண்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சத்யா(30) என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 11 வயதில் ஒரு மகளும், 9 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மாரனோடை கிராம சாலையில் நேற்று முன்தினம் ஆனந்தன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ஆனந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு ஆனந்தனின் உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள், விஷம் கலந்த மதுவை குடித்ததால் ஆனந்தன் இறந்துள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து குடும்ப பிரச்சினையால் ஆனந்தன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது மதுவில் விஷம் கலந்துகொடுத்து அவரை கொலை செய்தனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

சத்யாவின் நடவடிக்கையை நோட்டமிட்ட போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து சத்யா, தனது கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அப்போது அவர் போலீசாரிடம் கூறியதாவது:-

எனது கணவர் ஆனந்தன் பெங்களூருவில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இதனால் நான் அடிக்கடி எனது சொந்த ஊரான முத்தாண்டிக்குப்பம் கிராமத்துக்கு செல்வேன். அவ்வாறு சென்றுவரும்போது, முத்தாண்டிக்குப்பத்தை சேர்ந்த எனது மாமாவான சீனிவாசனுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தோம்.

இதற்கிடையில் சமீபத்தில் பெங்களூருவில் இருந்து வந்த கணவருக்கு எனது நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டது. இதை அறிந்து கொண்ட நானும், சீனிவாசனும் சேர்ந்து ஆனந்தனை கொலை செய்ய திட்டம் தீட்டினோம். அதன்படி ஆனந்தனிடம் எனது மாமா சீனிவாசன் உங்களை சந்திப்பதற்காக கெடிலத்தில் காத்திருப்பதாக கூறினேன்.

எங்கள் சதி திட்டத்தை அறியாத ஆனந்தனும், இதை உண்மை என்று நம்பி கெடிலத்திற்கு சென்று சீனிவாசனை சந்தித்தார். அங்கு சீனிவாசனும், ஆனந்தனும் மது குடித்தனர். அப்போது ஏற்கனவே விஷம் கலந்து வைத்திருந்த மதுவை சீனிவாசன் கொடுத்தார். அதை வாங்கி குடித்த ஆனந்தன், சில நிமிடங்களில் மயங்கி விழுந்தார். அவரது வாயில் இருந்து நுரைவெளியேறியது.

உடனே சீனிவாசன், அங்கிருந்து சென்று விட்டார். நானும் ஒன்றும் தெரியாததுபோல் வீட்டில் இருந்துகொண்டேன். ஆனால் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் நாங்கள் மாட்டிக்கொண்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து சத்யாவையும், சீனிவாசனையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News