செய்திகள்
குழந்தையின் பெற்றோர் சண்முகம்-தனலட்சுமி.

திருப்பூரில் பெண் குழந்தையை கொன்று புதைத்த பெற்றோர்?-போலீசார் விசாரணை

Published On 2021-06-18 09:14 GMT   |   Update On 2021-06-18 09:14 GMT
மருத்துவ பணியாளர்களுக்கு தெரியாமல் தனலட்சுமி தனது கணவர் சண்முகம் மற்றும் குழந்தையுடன் பல்லடத்தில் உள்ள வீட்டிற்கு சென்று விட்டார்.
பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஜே.கே.ஜே. காலனி பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது சொந்த ஊர் நெல்லை மாவட்டம். திருப்பூரில் தனியார் பஸ்சில் டிரைவராக பணியாற்றி வருகிறார். கடந்த  2016-ம் ஆண்டு உடுமலையை சேர்ந்த தனலட்சுமி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் தனலட்சுமி மீண்டும் கர்ப்பமடைந்தார். கடந்த  12-ந்தேதி அவருக்கு  பல்லடம் அரசு மருத்துவ மனையில் மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. இதனிடையே குழந்தைக்கு உடலில் ரத்தம் குறைவாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு டாக்டர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென மருத்துவ பணியாளர்களுக்கு தெரியாமல் தனலட்சுமி தனது கணவர் சண்முகம் மற்றும் குழந்தையுடன் பல்லடத்தில் உள்ள வீட்டிற்கு சென்று விட்டார். குழந்தை-தாய் மாயமாகியதால் அதிர்ச்சியடைந்த  திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி மருத்துவ பணியாளர்கள் இதுகுறித்து பல்லடம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து பல்லடம் சுகாதார நிலைய பணியாளர்கள் தனலட்சுமி வீட்டிற்கு சென்று பார்த்த போது வீட்டில் குழந்தை இல்லை. அதிர்ச்சியடைந்த மருத்துவ பணியாளர்கள் இதுபற்றி தனலட்சுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது தனலட்சுமி, திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து குழந்தையுடன் வெளியே செல்ல அனுமதிக்கமாட்டார்கள் என்பதால் கட்டை பையில் துணிகளுக்கு இடையே குழந்தையை வைத்து வீட்டிற்கு எடுத்து வந்ததாகவும் வீட்டிற்கு வந்து பார்த்த போது குழந்தை இறந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் தங்களுக்கு உறவினர்கள் யாரும் இல்லாத தால் கணவர் சண்முகம் போலீசார் விசாரணைக்கு பயந்து காளிவேலம்பட்டி பிரிவு அருகே குழி தோண்டி புதைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவ பணியாளர்கள் உடனடியாக   தனலட்சுமியை சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். மேலும் இதுகுறித்து பல்லடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. 

திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் பாதுகாவலர்கள் உள்ள நிலையில் தனலட்சுமியும், சண்முகமும் பச்சிளம் குழந்தையை எப்படி எடுத்துச்சென்றனர். 

மருத்துவமனையில் இருந்து தப்பி செல்ல காரணம் என்ன? குழந்தை இறந்த நிலையில்,போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் உடனடியாக புதைத்தது ஏன்? ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் 3-வதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் ,குழந்தையை கொலை செய்து புதைத்தனரா? என்று போலீசார் மற்றும் குழந்தைகள் நல பாதுகாப்பு குழும அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணை முடிவில் பெண் குழந்தை இறந்தது குறித்து உண்மை நிலவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News