செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனாவால் ஐரோப்பிய நாடுகளில் 5 லட்சம் பேர் பலியாகலாம் - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

Published On 2021-11-22 05:38 GMT   |   Update On 2021-11-22 05:38 GMT
ஐரோப்பிய நாடுகள் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுவதை அதிகப்படுத்த வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜெனீவா:

ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா தாக்குதல் அதிகரித்து உள்ளது.

இதனால் ஜெர்மனி, நெதர்லாந்து, ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரான்ஸ், செக்குடியரசு, சுலோவாக்கியா போன்ற நாடுகளில் தொற்று பரவல் மிக அதிகமாக உள்ளது.

இங்கிலாந்தில் ஒரே நாளில் 44 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதேபோல ஜெர்மனியிலும் நோய் தாக்குதல் பல ஆயிரத்தை எட்டியுள்ளது.

இதன் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டு வரப்பட்டு உள்ளன. ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணி செய்யும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஆனால் இந்த கட்டுப்பாடுகளை ஏற்க மறுத்து பொதுமக்கள் போராட் டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நெதர்லாந்து நாட்டில் இதனால் பெரிய கலவரமே வெடித்து இருக்கிறது.

இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய பிராந்திய இயக்குனர் ஹான்ஸ்க்ளுக் கூறியதாவது:-

ஐரோப்பிய நாடுகள் முழுவதும் டெல்டா வகை வீரிய வைரஸ் பரவி வருகிறது. இதை உடனடியாக கட்டுப்படுத்தாவிட்டால் பெரும் ஆபத்து ஏற்படும். முகக்கவசம் அணிவது, கட்டுப்பாடுகளை பின்பற்றுவது மிக முக்கியம்.

குளிர் காலம் என்பதாலும், போதுமான அளவுக்கு தடுப்பூசி போடாததாலும் பரவல் அதிகரித்து இருக்கிறது. எனவே தடுப்பூசி போடுவதை அதிகப்படுத்த வேண்டும். பொது சுகாதார நடவடிக்கைகளை கட்டாயமாக செயல்படுத்த வேண்டும். புதிய மருத்துவ சிகிச்சைகளையும் பின்பற்ற வேண்டும்.

கொரோனா வைரஸ் மீண்டும் ஐரோப்பிய நாடுகளில் உயிரிழப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. உரிய அளவில் அதை கட்டுப்படுத்தாவிட்டால் வருகிற மார்ச் மாதத்துக்குள் 5 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் ஏற்படும்.


கொரோனா கட்டுப்பாடு விதிப்பது என்பது தனி மனித சுதந்திரத்தை தடுப்பது அல்ல. அதை அனைவரும் புரிந்து கொண்டு அரசின் கட்டுப்பாடுகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்...இந்தியாவில் கடந்த 538 நாட்களில் குறைவான தினசரி கொரோனா பாதிப்பு

Tags:    

Similar News