செய்திகள்
தேடுதல் வேட்டை

காஷ்மீர் தேடுதல் வேட்டை- அடையாளம் காட்ட அழைத்துச் சென்ற பாகிஸ்தான் பயங்கரவாதி பலி

Published On 2021-10-24 10:56 GMT   |   Update On 2021-10-24 10:56 GMT
பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கும் இடத்தை அடையாளம் காண்பதற்காக, சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் பயங்கரவாதியை வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.
ஜம்மு:

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் பொதுமக்களை குறிவைத்து தாக்குவது அதிகரித்துள்ளது. இதையடுத்து பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் ராணுவம் மற்றும் உள்ளூர் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

பூஞ்ச் மாவட்டம் பட்டா துரியன் வனப்பகுதியில் கடந்த வாரம் நடந்த தேடுதல் வேட்டையின்போது, ஒன்பது ராணுவ வீரர்களைக் பயங்கரவாதிகள் கொன்றனர். அந்த பயங்கரவாதிகளைத் தேடும் பணி இன்று 14வது நாளாக நீடிக்கிறது. பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் அதிக எண்ணிக்கையில் வனப்பகுதியில் பதுங்கியிருப்பதால் ராணுவத்திற்கு கடும் சவாலாக உள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் பயங்கரவாதி ஜியா முஸ்தபாவை அழைத்துக் கொண்டு போலீசார் இன்று பட்டா துரியன் வனப்பகுதிக்குச் சென்றனர். பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கும் இடத்தை அடையாளம் காண்பதற்காக அவரை அங்கு கொண்டு சென்றனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் பாகிஸ்தான் பயங்கரவாதி முஸ்தபா கொல்லப்பட்டார். 3 வீரர்கள் காயமடைந்தனர். 

தாக்குதலின்போது பலத்த காயமடைந்த முஸ்தபாவை மீட்டு கொண்டு வர முடியாத அளவிற்கு பயங்கரவாதிகளின் தாக்குதல் உக்கிரமாக இருந்துள்ளது. அதன்பின்னர்  கூடுதல் படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் முன்னேறிச் சென்று முஸ்தபாவின் உடலை மீட்டு கொண்டு வந்ததாக காவல் துறை செய்தித் தொடர்பாளர் கூறினார். தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டை நடைபெறுகிறது. பாகிஸ்தான் பயங்கரவாதி கொல்லப்பட்டது தொடர்பான சட்ட நடைமுறையும் தொடங்கி உள்ளது.
Tags:    

Similar News