செய்திகள்
கோஷியாமி தமாரா சித்தோல்

ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்றெடுத்த பெண்- உலக சாதனை படைத்தார்

Published On 2021-06-09 09:02 GMT   |   Update On 2021-06-09 09:02 GMT
கோஷியாமி தமாரா சித்தோலுக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து பிரிட்டோரியா நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிசேரியன் மூலம் 7 ஆண், 3 பெண் என 10 குழந்தைகள் பிறந்தன
கேப்டவுன்:

ஆப்பிரிக்க நாடான மாலியை சேர்ந்த 25 வயதான ஹலிமா சிஸ்சே என்ற பெண்ணுக்கு சில மாதங்களுக்கு முன்பு ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பிறந்தது.

இதில் 5 பெண் குழந்தைகள், 4 ஆண் குழந்தைகள் ஆவார்கள். ஒரே பிரசவத்தில் அதிக குழந்தைகளை பெற்றெடுத்தவர் என்ற உலக சாதனையை ஹலிமா சிஸ்சே படைத்தார்.


ஆனால் இந்த சாதனை சில மாதங்களிலேயே முறியடிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்றெடுத்து உலக சாதனை படைத்துள்ளார். அந்த நாட்டை சேர்ந்த 37 வயதான கோஷியாமி தமாரா சித்தோலுக்கு ஏற்கனவே இரட்டை குழந்தைகள் உள்ளனர்.



மீண்டும் கர்ப்பம் அடைந்த அவருக்கு பரிசோதனையில் 8 குழந்தைகள் இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

கோஷியாமி தமாரா சித்தோலுக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து பிரிட்டோரியா நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிசேரியன் மூலம் 7 ஆண், 3 பெண் என 10 குழந்தைகள் பிறந்தன.

தாயும், 10 குழந்தைகளும் நலமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோஷியாமியின் கணவர் டெபோஹோ கூறும்போது, 10 குழந்தைகள் பிறந்து இருப்பது என்னை உணர்ச்சி வசமாகவும், மகிழ்ச்சியாகவும் ஆக்கியுள்ளது.

எனது மனைவி இயற்கையாகவே கருத்தரித்தார். எந்த மருத்துவ சிகிச்சையும் எடுக்கவில்லை என்றார்.

கோஷியாமி கூறும்போது, எனக்கு முதலில் ஸ்கேன் செய்தபோது 6 குழந்தைகள் இருப்பதாக தெரிவித்தனர்.

பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனையில் 8 குழந்தைகள் இருப்பதாக கூறினார்கள். நான் கர்ப்பம் ஆனதில் இருந்து கடினமாக உணர்ந்தேன். ஏனென்றால் நான் பெரும்பாலும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தேன்.

என் குழந்தைகள் அனைவரையும் ஆரோக்கியமான நிலையில் வளர்க்க எனக்கு உதவும்படி கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டேன் என்றார்.
Tags:    

Similar News