செய்திகள்
இந்தியாவில் ஒரே மொழி கொள்கை சாத்தியமில்லை- ஜக்கி வாசுதேவ் பேட்டி
இந்தியாவில் ஒரே மொழி என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது சாத்தியமில்லாத ஒன்று என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளார்.
திருவாரூர்:
தமிழகம் முழுவதும் காவிரி கூக்குரல் என்ற தலைப்பில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் மற்றும் அவரது குழுவினர் கடந்த வாரம் தலைகாவிரியில் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினர். இந்த பயணம் தொடர்ச்சியாக தஞ்சை, மன்னார்குடி, வழியாக திருவாரூரை நேற்று வந்தடைந்தது.
இதையடுத்து திருவாரூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஜக்கி வாசுதேவ் கலந்து கொண்டார்.
அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவிரி கூக்குரல் நிகழ்ச்சி விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதன் விளைவாக ஏராளமான விவசாயிகளும் விவசாய சங்க தலைவர்களும் நிகழ்ச்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றனர்.
மொழிகளை ஆதாரமாக கொண்டு தான் இந்தியாவில் பல மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. இந்தியா ஒரே நாடாக தான் இருக்க வேண்டுமே தவிர ஒரே மொழியாக இருக்கக்கூடாது. இந்தியாவில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகளை மக்கள் பேசி வருகிறார்கள்.
இதனால் இந்தியாவில் ஒரே மொழி என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது சாத்தியமில்லாத ஒன்று.
நமது தாய்மொழியை முதலிலும், இரண்டாவதாக ஆங்கிலமும் மற்றும் பிற மொழிகளாக ஏதாவது 2 மொழிகளையும் என மொத்தம் 4 மொழிகளை தெரிந்து வைத்திருந்தால் நாட்டில் அனைவரிடமும் பழகுவதற்கும், ஒன்றாக இருப்பதற்கும் அதிக வாய்ப்புகள் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.