இந்த முறை மத்திய மந்திரி சபையில் அ.தி.மு.க. இடம்பெறும்- அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி
சென்னை:
சென்னை திருவல்லிக் கேணியில் உள்ள தர்காவில் சந்தன கூடு திருவிழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தொழுகையில் பங்கேற்றார்.
அப்போது மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க. இடம்பெறுமா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அமைச்சர் பாண்டியராஜன் கூறியதாவது:-
மத்திய மந்திரி சபையில் அ.தி.மு.க. கண்டிப்பாக இடம்பெறும் என நான் நம்புகிறேன்.
என்னை பொறுத்தவரை சென்ற முறை மத்திய மந்திரிசபையில் அ.தி.மு.க. இடம் பெற்றிருக்க வேண்டியது. ஆனால் சில காரணங்களுக்காக அது தடைபட்டு விட்டது. இந்த முறை கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என்ற எண்ணம் எங்களிடம் உள்ளது.
பெரிய தோழமை கட்சிகளில் முதன்மையான கட்சி அ.தி.மு.க. தான். எம்.பி.க்களின் எண்ணிக்கையிலும் கூட நாங்கள் அதிகமாக உள்ளோம். அதனால் கண்டிப்பாக அது எங்கள் உரிமை என்று நினைக்கிறோம். கண்டிப்பாக அது கிடைக்கும் என நான் நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.